Monday, May 17, 2010

ஆடூர்கோபாலகிருஷ்ணனின் - நிழல்குத்து



தவறு இழைத்த மனத்தின் தத்தளிப்பும் அந்த சுழலிருந்து வெளியேற முடியாத நிலையில் ஏற்படும் மனச்சரிவும் ,குற்றமனப்பான்மையும் உள்ள ஒரு மனிதனின் தவிப்பும் , சமூக மனம் அல்லது பொது மனம் ஒரு குற்றத்தை எதிர் கொள்ளும் விதமும் தான் ஆடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்குத்து திரைப்படம். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்குத்து பல விருதுகளை பெற்றது. Amnesty international மனித உரிமைகளுக்கு பரிந்து பேசும் திரைப்படம் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்தது.


மஹாபாரத்தை அடிப்படையாக கொண்ட வேலபாரதம் (Velabharatham) என்ற நாடோடி இலக்கியத்தில் வரும் நிழல்குத்து என்ற பகுதியை Pannisseri Nanu Pillai என்ற பல்மொழி வித்தகர் கதக்களி நாடகமாக எழுதினார். பாண்டவர்களை கொல்வதற்கு பல வழிகளில் முனையும் துரியோதனன் சகுனியின் அறிவுரையின் பேரில் மாந்ரீகத்தில் பெயர் போன பாரத மலையன் என்பவனை வரவழைக்கிறான். மலையன் தன்னிடம் இருக்கும் மாயக்கண்ணாடியில் எழும் ஒருவனின் சாயையை கொல்வதன் மூலம் அந்த மனிதனைக்கொல்லும் நிழல்கொலையைச் செய்வதில் வல்லவன். துரியோதனன் மலையனிடம் பாண்டவர்களை “நிழல்குத்து” மூலம் கொல்லச்சொல்கிறான். மலையன் மறுக்கிறான். “யானைமுட்டை” ஒன்று தந்தால் கொல்கிறேன் என தப்பிக்கப்பார்கிறான். துரியோதனன் அவனை கொல்ல முயல “நிழல் குத்து”க்கு ஒப்புகொண்டு பாண்டவர்களை கொல்கிறான் மலையன். பல பரிசுப்பொருட்களுடன் வீடு வரும் மலையன் நடந்தை மலையத்தியிடம் சொல்கிறான். கிருஷ்ணனின் பக்தையான மலையத்தி அவனை கடுமையாக பேசுகிறாள். அவன் செய்த குற்றத்தை அவன் உணரவேண்டி தன் குழந்தையை கொல்கிறாள் மலையத்தி. குந்தி தேவியின் வேதனையை மலையன் அப்பொழுதுதான் உணரமுடியும் என்கிறாள். எல்லாவற்றையும் அறியும் கிருஷ்ணன் பின் பாண்டவர்களையும்,மலையனின் குழந்தையும் உயிர்பிக்கிறான். நிழல்குத்து என்ற வார்த்தையின் மூலம் இது.

நிழல்குத்து இந்தியா சமஸ்தான்ங்களாக பிரிந்துக்கிடந்த பிண்ணனியில் (1941) நிகழ்கிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் தமிழ்/மலையாள கலப்புள்ள ஒரு கிராமத்தில் ( படத்தில் ஒரு இடத்தில் “நாகர்கோயில்” என சொல்லப்படுகிறது) மஹாராஜா கொடுத்த வீடு,நிலங்களுடன் வசிக்கும் தமிழ் பேசும் காளிப்பன்(Oduvil  Unnikrishnan  ) என்றவன் குற்றவாளிகளை தூக்கிலிடும் வேலையை செய்கிறான். 25 வருங்களுக்கு முன்பு தான் தூக்கில் போட்ட ஒருவன் உண்மையில் குற்றவாளியில்லை ஒரு குற்றமும் செய்யாத நிரபராதி என தெரிந்தே மஹாராஜாவின் ஆனையை நிறைவேற்ற அவனை தூக்கிலிடுகிறான் காளியப்பன். அதிலிருந்து நிம்மதி இழந்து அலைகிறது காளியப்பனின் மனம். நிம்மதியிழந்து அலையும் அவன் மனம் இரண்டு விதங்களில் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறது. ஒன்று காளிதேவியிடம் தன்னை முற்றிலுமாக சமர்பித்துவிடுவது. ( எதற்கும் நான் காரணமில்லை.. செயலும் நீ..செய்பவளும் நீ ... ) இரண்டாவது சாராயம். அவனால் நிகழ்ந்துவிட்ட செயலை ஒன்றும் செய்யமுடியாது அதன் நிழலாய் எழு எண்ணங்களை கொல்ல முயலுகிறான் காளியப்பன்.



ஒரு சம்ரதாயமாக தூக்கிலிடப்பட்ட பின்பு அந்த கயிறு காளியப்பனிடமே கொடுக்கப்படுகிறது. ஊரில் காய்ச்சல், பேய்பிடித்துவிட்டது என உடல்,மன பிணிகளுடன் வரும் மக்களுக்கு அந்த கயிற்றை கொஞ்சம் அறுத்து தீயிலிட்டு பொசுக்கி காளிதேவியை பிரார்த்தித்து நெற்றியில் இட ஊர் பிணிகள் மறைகின்றன. ஒரு உயிரை கொன்ற அந்த கயிறு பல உயிர்களின் பிணி போக்கும் மாய உருவெடுக்கிறது. அரசு அதிகாரத்தின் குறியீடாக (நிழலாக)இருக்கும் அந்த கயிற்றை அழிப்பதன் மூலம் சமூகத்தின் பிணிகள் நீங்குகின்றன. நிழலை அழிப்பதன் மூலம் அசலை(அதிகாரத்தை) அழிப்பதாக சாமானியனான காளியப்பனின் ஆழ்மனம் கொள்ளும் திருப்தியின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம்.



ஒரு சமயம் மிகவும் சோர்வாக நடந்து செல்லும் காளியப்பனை எதிர்கொள்ளும் ஊர்காரர்கள் இருவர் ஏன் இவன் இப்படி சோர்வாக இருக்கிறான். மஹாராஜா தந்த வீடு,நிலம்,மாடு என வசதியாகத்தானே இருக்கிறான் என்கிறான் ஒருவன். அவனுக்கு மன வியாதி. ஒரு நிரபராதியை கொன்றுவிட்தற்கு தான் பெறுப்பு என குற்றமனப்பான்மை அவனை கொல்லுகிறது என்கிறான் மற்றொருவன். அவன் தன் கடமையைதானே செய்தான் அவன் எப்படி குற்றவாளியாகமுடியும் என்கிறான் முதலாமவன். அப்படியென்றால் தண்டனையை நிறைவேற்ற சொன்ன மஹாராஜாதான் குற்றவாளியா? எங்கிறான் இராண்டமவன். அதெப்படி அதற்குத்தான் மஹாராஜா ஒரு சூட்சமம் வைத்திருக்கிறாரே. தண்டனை நிறைவேற்றும் நாளும்,நேரமும் குறிக்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் தண்டனை நிறைவேறியிருக்கும் என தெரிந்து மஹாராஜா சற்று தாமதித்து குற்றவாளிக்கு கருணை விடுதலை அளித்து ஆணையை அனுப்புவார். மஹாராஜாவைப்பொறுத்தவரை அவக்கு விடுதலை அளித்தகிவிட்டது. எனவே அவர் குற்றவாளியல்ல. என்கிறான் முதலாமவன். இருவரும் சிரித்துக்கொள்கின்றனர். சிறிது நேரம் கழித்து “ அப்போ யார் குற்றவாளி?” என்கிறான் இரண்டாமவன். யாரும் பதிலளிக்காமல் முடிகிறது காட்சி ஒருவேளை இது இயக்குனர் நம் முன் வைக்கும் கேள்வியாக இருக்கலாம்.

திரைப்படத்தின் முடிவில் காளியப்பனை தேடி வருகிறார் சமஸ்தானத்தின் சிப்பந்தி. மீண்டும் ஒரு தூக்கு தண்டனை. காளியப்பன் தனக்கு உடல் நலம் சரியில்லை என கூறுகிறான். மஹாராஜாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று மிரட்டுகிறான் சிப்பந்தி. வேண்டுமெண்றால் மகனை துணைக்கு அழைத்து வா என்கிறான். காளியப்பன் தன் மகனோடு புறப்படுகிறான். தூக்குதண்டனையை நிறைவேற்ற. தூக்கு தண்டனைக்கு முந்தைய இரவு அவன் உறங்கக்கூடாது தொன்றுதொட்டு வரும் வழக்கம். பொழுது போக சாராயம் குடித்து விட்டு கதைகள் பேசிக்கொண்டிருப்பது எப்பொழுதும் நடப்பது. அன்று அவன் கூட இருக்கும் காவல் அதிகாரி ஒரு கதை சொல்கிறார்.



ஒரு கிராமம் . ஒரு காதல் ஜோடி. அவன் ஒரு புல்லாங்குழல் இசைஞன். கிராமத்தின் அழகிய புல்வெளி படந்த வெளிகளில் இருவரும் சுற்றித்திருகின்றனர். கதை செல்ல,செல்ல காளியப்பனுக்கு அவனின் இளைய மகளில் கதையாக விரிகிறது. அவன் ஆழ்மனதில் புதைந்துக்கிடக்கும் ஏதோ ஒரு விசயம் இப்படி அவனை நினைக்கதூண்டியிருக்கலாம். புல்லாங்குழல் இசை ( இசை: இளையராஜா) அந்த பரந்து விரிந்த வெளி எங்கும் பரவுகிறது. மாசு மறுவற்ற அவர்கள் அன்பைப்போல. அவர்களை அவர்கள் அறியாமல் தொடர்கிறான் காதலியின் அக்கா கணவன். ( கன்னியப்பனின் இளைய மகள் பூப்பெய்திய சடங்கிற்கு வரும் மூத்த மகளின் கணவன் இளைய மகளை பார்க்கும் வித்தியாசமான பார்வை காளியப்பனையும் அவன் மனைவியையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது) அவனுக்கு அவள் மேல் ஒரு கண். அவர்களின் வழக்கமான இடத்தில் அவள் அவனுக்காக காத்திருக்கும் ஒரு நாளில் அவளின் அக்காவின் கணவன் அவளிடம் தவறாக நடந்துக்கொள்ள அவள் போராடுகிறாள். போராட்டத்தின் ஒரு நிலையில் அவள் கொலையுருகிறாள். பலி அந்த இசைஞன் மேல் விழுகிறது. அரசு அவனுக்கு அந்த நிரபராதிக்கு தூக்கு தண்டனை அளிக்கிறது.

கதையை கேட்டுக்கொண்டிருந்த காளியப்பன் அந்த இந்த இசைஞன் இப்பொழுது எங்கே என கேட்ட , காவல் அதிகாரி சிரித்துக்கொண்டே அவனைத்தான் நீ இன்னும் இரண்டு மணி நேரத்தில் தூக்கிடப்போகிறாய் என்கிறார். மீண்டும் ஒரு நிரபராதியை கொல்ல வேண்டும். காளியப்பன் சுருண்டு விழுகிறான். அதிகாரிகளுக்கு பதட்டம். எப்படியும் குறிப்பிட்ட நேரத்தில் தண்டனையை நிறைவேற்றாவிடால் தன் பதவி பறிப்போகும் என பயப்படுகிறார். காளியப்பனின் மகனை வைத்து தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடிவாகிறது.



தூக்குதண்டனைக்கு எதிரானவனும், காந்தியவாதியுமான அவன் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தயாராகிறான். குடும்பம்,சமூகம்,சம்பிரதாயம் இவைகளூக்காக தன் தத்துவ நிலைப்பாடுகளை தொலைத்துக்கொள்ளும் ஒரு இந்திய இளைஞன். காளியப்பன் விழுந்த ஒரு சுழச்சியில் அவனும் விழுகிறான். ஒரு நிரபராதியை கொல்ல தயாராகிறான். குரல் ஒலியாக படம் முடிகிறது. “ தூக்கு தண்டனை நிறைவேறியது. வழக்கம் போல மஹாராஜாவிடமிருந்து கருணை தாங்கிய கடிதம் தாமதமாக வந்தது.”





Friday, May 14, 2010

சிறகுகள் துளிர்ந்தக் காலம்.



பதின் வயது நினைவுகள் தொடர் பதிவுக்கு அழைத்த கமலேஷ்க்கு நன்றி


நேற்று சாயங்காலம் நடந்ததுப் போல இருக்கிறது. ஆயிற்று 20-22 வருடங்கள்.ரயில் பிரயாணத்தின் போது ஜன்னலுக்கு வெளியே மாறும் காட்சிகள் போல எல்லாம் மாறிவிட்டது. பள்ளியின் இறுதி ஆண்டுகள்,கல்லூரி நாட்கள். பாட புத்தகங்களைவிட புதினங்களையும், கவிதைகளையும் அதிகம் படித்த தினங்கள். என் சாயங்கால பொழுதுகள் நந்தகோபாலுடன் கழியும். நானும் நந்தகோபாலும் மெல்ல நடப்போம். புதுஆற்று கரையிலிருந்த அவர்கள் வீட்டில் என் சைக்கிளைப்போட்டுவிட்டு மெல்ல நடப்போம். சாயங்கால மார்கெட் தாண் டும் பொழுது வெய்யில் சாயும். என்னைப்போலவே அவனுக்கும் அதிர்ந்து பேச வராது. சாயங்கால மார்கெட்டில் ரோட்டோரம் கீரை விற்கும் ஒரு பாட்டி நந்தகோபாலுக்கு தோழி. ஒரு வாஞ்சையான விசாரிப்பும் கோ பாலின் சிரிப்பும் நான் தினமும் எதிர்பார்த்து கிடக்கும் தருணம். அதிர்ந்து பேசாமல் அந்த பாட்டிக்கு பதிலளிப்பான் கோபால். அவளைப்பார்க்க OSHINஐ பார்ப்பது போல இருக்கிறதல்லவா? என்பான் கோபால் . OSHIN தனியார் தொலைக்காட்சிகளின் தொந்தரவு இல்லாத எளிமையான அந்த நாட்களில் தூர்தர்ஷனில் வந்துக்கொண்டிருந்த ஒரு ஜப்பானிய தொடர். எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான தொடர் அது. உண்மைதான் அந்த முதியவளின் முகம் OSHINஐ நினைவூட்டுவதா கத்தான் இருக்கும் . வாழ்க்கையின் சகல துன்பங்களையும் அதன் போக் கில் ஏற்று கடந்து வந்த அனுபவத்தால் கனிந்த முகம். போஸ்டாபீஸ் தாண்டி ரயில் நிலையம் கடப்போம்.



ரயில்நிலையம் அருகே SUPER தேனீர் கடையில் ஒரு தேனீர் அல்லது ஒர் Maltova! . அங்கு போடப்படும் புது பட பாடல்களுக்கென்றே ஒரு கூட்டம் அங்கு வரும். MP3 PLAYER களும், I-POD-களும், Mobile Phone களும் தங்களின் அசுரத்தனமான இருப்பை வெளிப்படுத்திக்கொள்ளாத நிலையில் SUPER தேனீர்கடைக்கு ஒரு மவுசு இருந்தது.ஒரு படத்தின் பாடல்கள் முடியும் வரை கூட்டம் நிற்கும். நாங்களும் ஒரு படத்தின் பாடலுக்கா நின்றிருக்கிறோம். அது - பூவேபூச்சுடவா. சில சமயம் அதற்காக இரண்டு தேனிர் பருக வேண்டியிருக்கும். தேனீரின் கதகதப்போடு மெல்ல ரயில் நிலையம் ஒட்டிய பாதையில் இருப்புப்பாதையை ஒட்டி நடக்கத்தொடங்குவோம். அந்த இருப்புப்பாதைகளுக்கு எங்களின் வருகை மிகவும் பழகிப்போன விசயமாக இருந்திருக்கவேண்டும். எங்களுக்கு அவைகளைப்பார்க்கும் பொழுதெல்லாம் ஷங்கன்னா (இப்போதைய எஸ்.ராமகிருஷ்ணன்) கணையாழியில் எழுதியிருந்த “பழைய தண்டவாளம்” என்ற சிறுகதை நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாத வியமாகவே இருந்த்து. அந்த கதையில் வரும் சூழல் போலவே இருந்த்து தஞ்சாவூர் ரயில் நிலைய சூழலும். “பழைய தண்டவாளம்”த்தி வந்த நடராஜனையும் ,கல்யா ணியக்காவையும் கூட நாங்கள் பார்த்தோம்! மெல்ல இருளத்தொடங்கும் அந்தியில் நாங்கள் ரயில்வே டிராக்கை ஒட்டி நடப்போம். ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி பேச்சு வாழ்வின் பல கிளைகள் வழியே ஓடும். அந்த மாத கணையாழில் வந்த “கிளிக்காலம்” பற்றியோ “மேபல்” பற்றியோ ( மேபலை ஜே.மங்கயர்கரசி என்ற பெண் எழுதிருந்தார். தஞ்சாவூர் பிண்ணனியில். நாங்கள் அந்த எழுத்தாளினியை கண்டுப்பிடிக்க ஜேம்ஸ்பாண்டு வேலைகள் எவ்வளவோ செய்து முயன்றோம். முடியவில்லை. நன்கு ஐந்தாண்டுகளுக்கு பிறகு தஞ்சை ப்ரகாஷை சந்தித்தபோது அவர் சொன்னார் நான் தான் அந்த . ஜே.மங்கயர்கரசி!) அல்லது ராஜகோபால் அண்ணன் அறிமுகப்படுத்தியிருந்த Anthropomorphism என்ற புது விசயம் குறித்தோ, அருளில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் “ உயிருள்ள வரை உஷா” ஏன் அப்படி பிய்த்துக்கொண்டு ஓட வேண்டும் என்பது பற்றியோ , இறை நம்பிக்கை பற்றியோ, ஆப்பரேஷன் பூமாலை பற்றியோ, ராஜகோபால் அண்ணிடம் பார்த்திருந்த FREEDOM FROM THE KNOWN புத்தகம் பற்றியோ, பாரதிராஜாவின் புது கதாநாயகி ரேவதி பற்றியோ பேச்சு தொடங்கும். அன்றைய பேச்சை தொடங்கி வைக்கும் புள்ளி தேவரகசியமாக இருந்தது. கண்களுக்கு தெரியாத ஒரு தேவதை அந்தரத்திலிருந்து திடுமென எங்களுக்கான உரையாடல் களத்தை விரித்துச்செல்லும்.




வாழ்வை பற்றிய எங்கள் பார்வை உருவான காலம் அது. நாங்கள் படிக்கவேண்டிய புத்தகங்கள், சந்திக்க வேண்டிய மனிதர்கள்,பார்க்கவேண்டிய திரைப்படங்கள் என்ற பட்டியலை தயாரித்தபடியே நடப்போம். அந்த பட்டியல் தினமும் தினமும் வளர்ந்துக்கொண்டே இருந்தது. அப்படியொரு பட்டியலை தயாரிப்பது எங்களுக்கு மிகவும் விருப்பமான விசயமாக இருந்தது. என்றாவது ஒரு நாள் எல்லாவற்றையும் படித்திருப் போம்,பார்த்திருப்போம் இல்லையா? என்பான் கோபால் நான் தலையசைப்பேன். மெல்ல ரயில் பாதையை தாண்டி பழைய பிரிடிஷ்காலத்து மேம்பாலம் (இப்போது அது இல்லை) வழியாக இறங்கத்தொடங்குவோம். இப்போதும் இந்த இடத்தைக்கடக்கும்பொழுதெல்லாம் கோபால் “லோலிடா” (LOLITA) பற்றி பேசிகொண்டு அந்த இறக்கத்தில் நடந்து வந்தது நிழலாடுகிறது. “லோலிடா” பற்றி எங்களுக்குள் கருத்து பேதம் இருந்தது. “அம்மா வந்தாள்” படித்தபோது இருந்த குழப்பமான மனநிலை “லோலிடா” படித்தபோதும் எனக்கு இருந்தது. கோபாலுக்கு “லோலிடா” மிகவும் பிடித்திருந்தது. எங்களின் முரண்களிலிருந்து நாங்கள் எங்களுக்கான பார்வையை உருவாக்க முயன்றுக்கொண்டிருந்தோம். கோபாலோ அல்லது நானோ சமீபத்தில் படித்த புத்தகமோ, தூர்தர்ஷ்னில் பார்த்திருந்த பிராந்திய மொழி திரைப்படமோ அல்லது எங்களை பாதித்த மனிதர்கலோ எங்களின் பார்வையில் ஊடுபாவிக்கொண்டிருந்தனர். அவர்கள் வழியே எங்கள் வாழ்க்கை தன்னை உருவாக்கிக் கொண்டிருந்தது.


மேம்பாலத்தின் வழியே கீழே இறங்கி , ராணிபாரடைஸ் பின்புறம் வழியே கலக்டர் அலுவலக சாலையில் நடப்போம். இருள் படந்திருக்கும். நல்ல அகலமான சாலை அது. பகல் முழுக்க பரபரப்பாக இருக்கும் அந்த சாலை சாயங்காலத்திற்கு பிறகு மிக அமைதியாகிவிடும். ஏதோ நாங்கள் பேசுவதை கேட்பதற்கென்றே அது மிக அமைதியாக காத்திருப்பது போல தோண்றும். எங்கள் கனவுகள் முழுவதும் தெரியும் அந்த சாலைக்கு. என்றாவது ஒரு நாள் எங்கள் கனவுகள் நிறைந்த நாளில் மீண்டும் நானும் கோபாலும் அந்த சாலையின் வழியே நடந்து வருவோம் என நான் நினைத்துக்கொள்வேன். அப்போது நாங்கள் குல்சாரி கதாநாயன் போல மிகவும் வயோதிகர்களாக இருக்கலாம். நினைவுகளில் மூழ்கி பேசாமல் நடந்து செல்வோம். அந்த சாலை மட்டுமல்ல எங்களோடு பேசிய எத்தனையோ இடங்கள் தஞ்சாவூரில் அங்குமிங்குமாய் இருந்தன. பெரிய கோயிலில் இருந்த “ நெல்லிக்கனி“ மரம். எங்களின் போதி மரம். “மோகமுள்” யமுனாவையும் பாபுவையும் எங்களைவிட அந்த மரத்திற்கு அதிகம் தெரிந்திருக்கும். அசோகமித்திரனின் “இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும் “ மாதிரி ஒரே ஒரு சிறுகதையை எழுதி விட்டால் போதும் என் ஜன்மம் சாபல்யம் அடைந்துவிடும் என நான் ஒரு முறை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சொன்னபோது அந்த மரம் சிலிர்த்துக்கொண்டு காற்றில் அசைந்த்து. அல்லது நக்கலாய் சிரித்துகொண்டதோ என்னவோ!!



புது ஆற்றங்கரை ஓரமாய் நடந்து நந்தகோபாலின் வீடு வந்து சேரும் பொழுது நிலவு காயும். மீண்டும் ஒரு சாயங்காலம் கழிந்திருக்கும். அவர்கள் வீட்டு அரசமரத்தடியில் நின்றபடி பேசுவோம். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏதேதோ நினைவுகளுடன் பட்டுநூல்கார வீதிகளை கடந்து வீடு திரும்புவேன். மெல்ல பின் நகரும் அமைதியான இரவு.

நேற்று சாயங்காலம் நடந்தது போல இருக்கிறது. ஆயிற்று 20-22 வருடம். நந்தகோபாலுக்கு பாம்பேயில்(அப்போது பாம்பே) வேலைகிடைத்தது. நான் எங்கெங்கோ சுற்றினேன். எப்போதாவது நினைவில் வந்து போனது அந்த சாயங்காலங்கள். வெகு நாட்களுக்கு பின் கோபாலை ஒரு வருடத்திற்கு முன் சந்திதேன் ஒரு திருமணநிகழ்வோன்றில். மிகவும் களைத்திருந்தான்.என்னைப்போலவே. அவன் குழந்தைளை அறிமுகப்படுத்தினான். பெண்குழந்தையின் பெயர் யமுனா. நான் கோபாலை பார்த்து சிரித்தேன். புத்தகங்கள் படிக்கிறாயா? என்றேன். சிரித்தான். நானும் சிரித்தேன். வாழ்வின் நெருக்கடியில் சிக்கி தொலைந்து போனவர்களின் சிரிப்பு. வீட்டிற்கு அழைத்தேன் இன்றே திரும்பவேண்டும் இன்னோரு சமயம் வருகிறேன் என்றான். அந்த இன்னொரு சமயம் இதுவரை வரவில்லை.







பின் தொடர நான் அழைப்பது



அழைப்பை ஏற்றமைக்கு நன்றி லேகா,றமேஷ்