Tuesday, January 19, 2010

நீ இல்லாமல் என் வாழ்வில்லை




குட் பிளாக்காக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி 



வளர்ச்சியடைந்த எந்த சமூக அமைப்பிலும் சட்டமும் மனித உரிமைகளும் எப்பொழுதுமே விவாதத்திற்கு உரிய விசயமாகவே இருக்கிறது மனித உறவுகள் மனம்சார்ந்தவை,உளவியல் சார்ந்தவை. உறவுகளின் இழப்பு கள்,பிரிவுகள் விட்டு செல்லும் உளவியல் சுவடுகள் பல சமயங்களில் மனித வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டு விடுகின்றன.அதிலிருந்து மீள முடியாமல் சரிந்து போகும் மனம் தன் பொளதீக வாழ்வின் சாதாரண நிகழ்வுகளை கூட எதிர்கொள்ளமுடியாமல் தன்நிலை இழந்து போய்விடுகிறது. சாமானிய மனிதனின் உறவுகள் சார்ந்த உளவியல் உலகம், உயிர்ப்பற்ற அரசாங்க சட்டதிட்டங்களையும்,அதை செயல்படுத்தும் வறண்ட அதிகார அமைப்பும் எதிர்கொள்ளும் பொழுது மிஞ்சுவது அபத்தமும்,ஏமாற்றமும் ஆதவற்ற நிலையும் தான். தைவான் இயக்குனர் Leon Dai இயக்கி இந்த வருடம் அந்நிய மொழி படமாக தைவானிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள No Puedo Vivir sin ( நீ இல்லாமல் என் வாழ்வில்லை) என்ற திரைப்படம் ஒரு தகப்பனின் இந்த நிராதரவான நிலையை , அதிகாரத்தின் அற்தமற்ற அபத்தத்தை முன் வைக்கிறது


Taipei நகரமே திடீரென அவனால் பரபரப்பானது. இது மாதரியான நிகழ்வுகளை பெரும் மனதீனிகளாக்கும் நகரத்திலுள்ள எல்லா தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்ப தொடங்கின.”முட்டாள்” “கிரிமினல்” “பிரபலமாக விரும்புகிறான் போல” பல விதமான விமர்சனங்கள். காவலர்கள் அவன் அருகே நெருங்க முடியாமல் நின்றனர். நெருங்கினால் விபரீதமாகிவிடுமோ என்ற அச்சம். அவன் உடலை கட்டியணைத்திருக்கும் சின்ன குழந்தையோடு நகரத்தின் பரபரப்பான உயர்ந்த பாலமொன்றில் தொங்கிகொண்டிருந்தான் அவன்.


Kaohsiung என்ற கடற்கரை நகரத்தில் வசிக்கும் அவன் - Wu-hsiung யாராலும் உபயோக படுத்தபடாத துறைமுக சிறுகிடங்குதான் அவனுக்கும் அவனது ஏழுவயது மகள் Meiக்கும் இருப்பிடம். அவனுக்கு பெரிதாக வருமானம் வருவதில்லை துறைமுகத்தை சுற்றி கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளில் கிடைக்கும் சொற்ப வருமானம் கடலில் கிடைக்கும் உணவு என எந்த தொந்தரவும் இல்லாத எளிமையாக நகர்ந்துக்கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை .... அவர்கள் வரும் வரை.


ஒரு காலை நேரம் காவலர்கள் அவனை தேடி வருகிறார்கள். இரண்டு மூன்று முறை “மாவட்ட அலுவலகம்” கடிதம் அனுப்பியும் அவன் பதிலளிக்காததால் அவர்கள் நேரில் வந்ததாக கூறுகிறார்கள். Meiயின் வயது எனன கேட்க எழு என்கிறான் Wu-hsiung. Meiயை மாவட்ட காவல் அலுவலத்தில் பதிவு செய்யவேண்டும் எனவும் அப்படி செய்யாத பட்சத்தில் அவளை பள்ளியில் சேர்க்கமுடியாதெனவும் தவறி பின் கண்டுபிடிக்கப்பட்டால் நூற்றுக்கணக்கான டாலர்களை தினமும் அபராதமாக செலுத்தவேண்டியிருக்கும் எனவும் கூறி செல்கின்றனர்.

மாவட்ட அலுவலகம் செல்லும் Wu-hsiungக்கு Meiயை அங்கு பதிவு செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. Wu-hsiungக்கும் அவன் மனைவியும் “சேர்ந்து” வாழ்ந்தார்களே தவிர சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ளவில்லை. Wu-hsiungன் மனைவியும்(?) அவனை விட்டு பிரிந்து பல வருடமாகிவிட நிலையில் அவன்தான் Mei அப்பா என சொல்லிக்கொள்ள எந்த சட்டபூர்வமான பத்திரங்களும் இல்லாத நிலையில் பதிவு செய்ய மறுக்கிறார்கள் அதிகாரிகள். Meiயின் படிப்பும் அவள் வாழ்வும் கேள்விக்குறியாகிறது. நான் தான் அவளின் தகப்பன் இதோ உயிருடன் உங்கள் முன் நிற்கிறேன் எனச்சொல்லும் Wu-hsiungமிடம் அதெல்லாம் சரி தஸ்தாவேஜூக்கள் எங்கே என்கிறது சட்டம்.


 
Wu-hsiung க்கென்று சொல்லிக்கொள்ள இருக்கும் ஒரே நண்பன் Ah Tsaiயிடம் பிரச்சனையை சொல்கிறான். Ah Tsaiயின் யோசனையின் பேரில் Taipeiயின் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருக்கும் அவர்களது பள்ளி பருவத்து தோழன் Lin-Chin-Yiயை சந்தித்து உதவி கேட்கிறான் Wu-hsiung.மிகவும் பரபரப்பாக இருக்கும் Lin-Chin-Yi தன் உதவியாளன் மூலம் Wu-hsiungக்கிற்கு தேவையான உதவிகளை செய்ய சொல்கிறான்.உதவியாளளின் உதவியோடு தலைமை காவல்அலுவலக அதிகாரியை சந்திக்கிறான் Wu-hsiung.அவர் அவனை மீண்டும் அவனது ஊரில் உள்ள பதிவு அதிகாரியை சந்திக்க சொல்கிறார். ஏற்கனவே அவருக்கு தான் தகவல் அளித்து விட்டதாகவும், அவனது விசயத்தை அவர் சிறப்பு கவனம் கொண்டு பதிவு செய்வார் எனவும் அந்த பதிவு இங்கு தலைமையகம் வந்தவுடன் தான் உடன் தேவையானவற்றை செய்வதாக கூறுகிறார்.

Wu-hsiung மீண்டும் தன் நகரத்து காவல்-நிலைய பதிவு அதிகாரியை சந்திக்க வரும் பொழுது அவர் தற்சமயம் அலுவலகத்தில் இல்லை எனவும் எப்பொழுது வருவார் என நிச்சயமில்லை என்கிறாள் ஒரு பெண் மேலும் அவனது “ கேஸ்” மாவட்ட சமூக அலுவலகத்திற்கு மாற்றபட்டுவிட்ட்தால் இனி அங்குதான் அவன் தொடர்புக்கொள்ளவேண்டும் என கூற Wu-hsiung மனச்சோர்வடைகிறான்.அதன் பின் அவனை மீண்டும் தொடரும் காவலர்களுக்கு பயந்து வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக தப்பித்து மீண்டும் Taipeiக்கு வருகிறான் Wu-hsiung . இந்த முறை அவனால் யாரையும் சந்திக்க முடிவதில்லை. நடந்தே நகரம் முழுவதும் அலையும் அவர்கள் இருவரையும் ஒரு நிலையில் அவன் மேல் சந்தேகப்படும் காவல்துறை கைது செய்து பின் விடிவிக்கிறது. உடல் சோர்வும் மன சோர்வும் ஆதரவற்ற மனநிலை ஏற்படுத்தும் விரக்தியும் தன் பிரச்சனை கவனிக்கப்படவேண்டும் என்ற இருத்தல் சார்ந்த மனவெழுச்சியும் Wu-hsiung யை அப்படி செய்ய தூண்டுகிறது....

பாலத்தில் தன் குழந்தையுடன் தொங்கும் அவனை காவலர்கள் அவன் அசரும் நேரம் பார்த்து பிடித்து கைது செய்கின்றனர். காலம் ஓடுகிறது சிறைவாசத்திற்கு பிறகு வெளிவரும் Wu-hsiungக்கு Meiயை பற்றிய விபரம் தெரியவிலை. அவன் நண்பனுக்கும் அவளின் விபரம் தெரியவிலை. தினமும் ஒவ்வொரு பள்ளியாக அலையும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. “மாவட்ட அலுவலக”த்திலிருந்து அவனுக்கு எந்த தகவலும் தர மறுக்கின்றனர். தன் அருகில் எங்கோ இருக்கும் தன்னை பிரிந்து இருக்கும் குழந்தை, அதற்கு காரணமான புரிந்துக்கொள்ளமுடியாத அபத்தமான அதிகார அமைப்பு, அமைப்பை ஒன்றும் செய்யமுடியாத சாமானிய மனிதனின் ஆதறவற்ற நிலை இதன் சுழற்சியில்  எதுமே யோசிக்க முடியாத ஏதுமற்ற வெறுமையில் கழிகிறது Wu-hsiung வாழ்க்கை.

எதன்மேலும் பிடிப்பில்லாத Wu-hsiung கவனக்குறைவால் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் சமயம் அவன் நன்பன் ஒரு கடிதத்துடன் வருகிறான். “ மாவட்ட அலுவலத்திற்கு” அவனை வரசொல்லி வந்த கடிதம். அவன் அங்கு கண்காணிப்பாளரை சந்திக்கும் பொழுது Mei நலமாக இருப்பதும் படிப்பில் சுட்டியாக இருப்பதும் தெரிகிறது. கூடவே அவள் இந்த இரண்டு வருடமாக யாருடனும் பேசாமல் இருப்பதும். Wu-hsiung அழுகிறான். அவன் மீதான அன்புபின் வெளிப்பாடாகவும் அமைப்பிற்கு எதிராக அவள் காட்டிய மொளனமான எதிப்பாகவும் அது இருக்கலாம். Wu-hsiung வீடு திரும்புகிறான்.

ஒரு சாயங்காலம். Wu-hsiung படகில் கடல் நடுவே இருக்கிறான் ஏதோ வேலை.வெய்யில் மெல்ல மங்குகிறது. “Wu அங்கே பார்” என கத்துகிறான் படகுகாரன். Wu நிமிர்ந்து பார்க்கிறான். தூரத்தில் கடற்கரையில் மற்றும் சிலருடன் Mei. படகு மெல்ல கரையை நெருங்க்குகிறது Mei தன் அப்பாவை எதிர்நோக்கி நிற்கிறாள். Wu-hsiung அவளை பார்க்கிறான் அவளின் கன்ன கதுப்பில் சிரிப்பின் மலர்ச்சி தெரிகிறது




பின் குறிப்புக்கள்:

* இந்தப்படம் 2003ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது

* படம் Hoklo Taiwanese மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும் தலைப்பு ஸ்பானிஸ்     மொழி!

* படத்தில் Wu  பாத்திரத்தை ஏற்று நடித்த Chen Wen-pin தான் படத்தின்    திரைகதையாசிரியர்

* இந்த படம் கோவா திரைப்படவிழாவில்(2009) சிறந்த படமாக    தேர்ந்தெடுக்கப்பட்டது

* 2009 வெளிவந்த இப்படம் ஒரு கருப்பு-வெள்ளை படம்.


9 comments:

  1. நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அண்ணாமலை.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு தோழரே...உங்களின் பகிர்வுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமையான கதை. பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த முறை எழுத்து பிழைகள் சற்று அதிகம். கொஞ்சம் பார்த்து கொள்ளவும் By Mohan Kumar

    ReplyDelete
  5. நன்றி கமலேஷ்


    //எழுத்து பிழைகள் ...//
    கண்ணில் பட்டவற்றை திருத்தியிருக்கிறேன்.கவனத்தில் கொள்கிறேன்.
    நன்றி மோகன்குமார்.

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு நண்பரே!

    ReplyDelete