Thursday, February 18, 2010

ரெயினீஸ் ஐயர் தெரு

என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் : 1

ரெயினீஸ் ஐயர் தெரு



வண்ணநிலவன் எழுதிய ரெயினீஸ் ஐயர் தெரு. என்பதுகளில் கணையாழி மூலமாக சுஜாதா,பாலகுமாரனைத் தாண்டி தமிழில் வேறுவகை எழுத்து இருப்பதை நான் அறியத்தொடங்கிய காலம். அது மாதிரியான எழுத்துக்களை தஞ்சாவூர் மைய நூலகத்தில் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு நாள் என் கையில் கிடைத்த சின்ன புத்தகம். ரெயினீஸ் ஐயர் தெரு. “இதை படிப்பவன் முட்டாள்” என முதல் பக்கத்தில் யாரோ கிறுக்கிவைத்திருந்தார்கள். அந்த நாவலை நான் படித்து முடித்த சாயங்கால வேளை இன்னும் என் நினைவில். மனதளவில் திடீரென நான் மிகவும் முதிர்வு கொண்டவனாகவும், பெரிய மனிதனைப்போலவும் நடந்துக்கொண்டேன், சாம்சஸன் அண்ணனை எஸ்தர் சித்தியோடு தவறான நேரத்தில் பார்த்து விட்ட மூன்றாவது வீட்டு அற்புதமேரியைப்போல.

அந்த நிகழ்விற்கு பிறகு அற்புதமேரி எப்போதையும் விட அண்ணனிடமும்,எஸ்தர் சித்தியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துக்கொண்டாள்.வகுப்பில் கூட பெரிய முதிர்ந்த பெண்னைப்போல நடந்துக்கொண்டாள். எஸ்தர் சித்தி எப்போதும் போல அளவற்ற ஆனந்தத்தையும் அமைதியையும் ஊரிலிருந்து கொண்டுவந்து காட்டிவிட்டு எடுத்துக்கொண்டுப்போனாள். எஸ்தர் சித்தியின் ப்ரியம் எல்லா கசடுகளையும் தூர வீசி புது மணலை தெருவுக்குள் வாரி இறைக்கும் மழைப்போல இருக்கும். ரெய்னீஸ் ஐயர் தெருவில் முதல் வீட்டு டாரதிக்கும், அவள் எதிர் வீட்டு இருதயம் டீச்சருக்கும் மழையில் நனைய பிடிக்கும். ஆனால் இருதயம் டீச்சர் பெரியவளாகவும், ஆசிரியையாகவும் இருக்கும் பொழுது எப்படி மழையில் நனையமுடியும்?

இருதயம் டீச்சருக்கு எப்பொழுதும் வீட்டைப்பற்றிய நினைவுதான்.தன்னுடைய வீடு அலங்கோலமாக இறைந்துகிடக்க தன் புருஷனும்,மாமியாரும் ஊரிலேயே மிக மோசமான அழுக்கு உடைகளை உடுத்திக்கொண்டு திரிவது போலவோரு தவிப்பு எங்கேபோனாலும் கூடவே இருக்கும் கோழிகள் வேறு வீடு முழுக்க இருந்து வைக்கும். இருளும்,அழுக்குமான இந்த வீட்டில் இருதயம் டீச்சரின் புருஷன் சேசய்யாவின் இருமல் சப்தம் தொடர்ந்துக்கேட்கும். நெஞ்சு எலும்பெல்லாம் மூச்சு முட்டிப்போய் நொறுங்கி விழுவது போல குலுங்கி இரும்முவான். நேரம் ஆக ஆக தெருவே இடிந்து விழுவது போல அவனுடைய சப்தம் கூடிக்கொண்டே போகும். அவன் அம்மாவிற்கு இதெல்லாம் பழகிப்போய்விட்டது. இருதயம் தான் தன் காரியங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வருவாள் அவனுடைய நெஞ்சை தடவிக் கொடுப்பாள். தன் தோளில் அவனை சாற்றியவாறே நட்த்திக்கொண்டுபோய் கட்டிலில் படுக்கவைப்பாள். அவள் சேலையில் கண்ணீர் துளிகள் தெரிக்கும். அவன் அழுகிறான் போல. இருதயம் டீச்சர் அவன் முகத்தை தூக்கிபார்ப்பாள். சவரம் செய்யாத அவன்முகத்தை கைகளில் ஏந்திய படியே சேலைத்தலைப்பை இழுத்து கண்ணகளை துடைத்து விடுவாள் அவனை அந்த நேரத்தில் தன் பிரியமான ஆண்குழந்தையாகவே நினைத்தாள். வெகு நேரம் வரை தோளில் சாற்றியபடியே கட்டில் விளிம்பிள் உட்கார்ந்திருந்தாள். எதிர் வீட்டு டாரதி முன் வாசலில் தெரு நடைக்கல்லில் தெருமுனையை பார்த்தமாதிரி உட்கார்ந்திருந்தாள்.

தெரு முனையில் இருதயம் டீச்சர் வீட்டு பெட்டைகோழிகுஞ்சுகள் இரண்டு இரை பொறுக்கிக்கொண்டிருந்தன. டாரதிக்கு அந்த கோழி குஞ்சுகள் அப்படி மேய்ந்துக்கொண்டிருப்பது ஏனோ டாரதிக்கு மிகுந்த துயரத்தை தந்தது. அந்த கோழிகுஞ்சுகள் தன்னந்தனியே அனாதரவாகத் தங்கள் வாழ்நாளை கழித்து வரும் படி ஆனது போல தோண்றியது.சிறு வயதில் தாயை இழந்து பெரியம்மா வீட்டில் வளரும் அவளுக்கு பிறந்த கொஞ்சம் நாட்களிலேயே தாயைப்பிரிந்து தனியே இரை பொறுக்கித்திரியும் கோழிகுஞ்சுகளை பார்க்க துயரமாக இருக்கிறது. துயரமானமான இந்த வாழ்வின் ஊடே அவளின் தருணங்களை சந்தோஷமாக்கவும் அர்த்த படுத்திக்கொள்ளவும் சில மனிதர்களால், அவர்களின் பிரியத்தால் வாய்கிறது. எபன் அண்ணனின் நினைப்பும்,அருகாமையும் டாரதிக்கு சந்தோஷம் தருபவை.எபன் அண்ணனின் “ ரெயினீஸ் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்” என்ற கவிதை ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த பொழுது டாரதிக்குதான் எவ்வளவு சந்தோஷம். தெருவில் எல்லா வீடுகளுக்கும் அலைந்து அதை சந்தோஷமும் பெருமையும் பொங்க படித்துக்காட்டி வந்தாள் அவள். சிறு வயதில் அம்மாவை சாக்கொடுத்து அப்பாவால் அடுத்த வீட்டில் வளர விட்டப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த அன்பையும் இரக்கத்தையும் விட பெரிது ஒன்றும் இல்லை. இதையெல்லாம் அவள் எபன் அண்ணன் மூலமாக அவள் பெற்றுக்கொண்டாள். எபன் அண்ணனின் அன்பு மட்டும் இல்லையென்றால் டாரதி என்ன செய்ய முடியும்? தியோடர் அண்ணன் போல துயரங்களை மறக்க குடித்துவிட்டு கிடக்கமுடியுமா என்ன அதுவும் ஒரு பாதிரியார் வீட்டு பெண்!

அற்புத மேரியின் வீட்டிற்கு எதிர் வீடுதான் தியோடர் அண்ணனின் வீடு. அன்னமேரி டீச்சரின் பையன். அன்னமேரி டீச்சர் சேலையை தொடைக்கு மேலே திரைத்துக்கட்டிக்கொண்டு வீட்டுக்குள் நடமாடிக்கொண்டிருப்பாள் பக்கத்து வீட்டு சேசையா தொடர்ந்து இருமும்பொழுதெல்லாம் ரோட்டிற்கு வந்து இருதயம் டீச்சரிடம் கவலைப்பட்டு திரும்பும்பொழுதெல்லாம் அற்புத மேரியின் கண்கள் எதிவீட்டைப் பார்க்கும். ஜன்னலுக்குளேயிருந்து சாம்சனின் முகம் தெரியும். அவன் இவளையே பார்த்துக்கொண்டிருப்பான். அன்னமேரி தியோடரை கவனிப்பதே இல்லை அவளின் மருமகள் எலிசபெத் இறந்ததிலிருந்தே தியோடர் குடிப்பதும் திண்ணையில் கிடப்பதும் ரெய்னீஸ் ஐயர் தெருவில் சகஜமான விசயமாகிவிட்து. யாரும் தியோடரை மதிப்பதில்லை. எபனுக்கு தியோடரை , அவன் அன்பை புரிந்துக்கொள்ளமுடியும். நாலாவது வீட்டு கிழ தம்பதிகள் ஆசீர்வாதம்-ரெபேக்காள் இவர்களுக்கும் தியோடரை பிடிக்கும்.



ஒவ்வொரு மழைக்கும் ஆசீர்வாத்த்தின் வீடு இடிந்தும் சிதிலமாகிக்கொண்டும் இருந்தது. அவர்கள் மகன் அனுப்பும் மணியாடரை கொண்டு வரும் தபால்காரனைத்தவிர யாரும் அவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. ஒரு மழையில் கிழவிக்கு காயம் பட தியோடர் தான் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றான். வெறும் அடுப்பங்கரையில் ஒடுங்கி வாழ்ந்த அந்த தம்பதிகளுக்கு ஒரு மழையில் ரெய்னீஸ் ஐயர் தெருவில் யாராலும் மதிக்ப்படாத தியோடர் இடிபாடுகளில் இருந்து சாமான்களை மாற்றிக்கொடுத்து அவர்களை பார்த்துக்கொள்கிறான்.




“ரெய்னீஸ் ஐயர் தெரு” வாசிகள் யாரும் முழுமையானவர்கள் இல்லை. மனித வாழ்வின் எல்லா குரூரங்களும் , சுயநலன்ங்களும், மன வக்கிரங்க்களும், பலவீனங்களும் கொண்டவர்கள்தான். மீளமுடியா துயரங்களையும், அவலங்களையும் சோகங்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது அவர்கள் வாழ்வு. இதையும் மீறி எதோ அவர்களை வாழ்வின் மீது, சக மனிதர்கள் மீது பிடிப்பை கொடுத்து அவர்கள் வாழ்வை நகர்த்துகிறது. சக மனிதர்கள் மீதான பிரியம், இந்த பலவீனங்கள் ஊடேயும், துயரங்கள் ஊடேயும் நிறைந்து ஓடிக்கொண்டே இருக்கிறபோது எல்லா அவலங்களும்,துயரங்களும், மன மாச்சரியங்களும் கானாமற்போகும் மாய நிகழ்வை ரெய்னீஸ் ஐயர் தெரு” வாசிகளின் வாழ்வின் வழியே நிகழ்த்திக்காட்டுகிறது நாவல். கதையம்சம் இல்லாத ஆனால் கதை மாந்தர்களின் மனவோடை வழியாக பயணிக்கும் நாவல் நம் மனதை வந்தடைகிறது



நாவல் இப்படி முடிகிறது .

எல்லாவற்றையும் உய்விக்கிற மழைதான் “ரெய்னீஸ் ஐயர் தெரு”வை பெருமைப்படுத்துகிறது. டாரதி நினைத்தபடியே அன்று மழை வந்தது. மழையில் ரெய்னீஸ் ஐயர் தெரு”வைப்பார்க்க அழகாக இருந்தது. தெருவின் அமைதியில் மழை மேலும் பிரகாசமெய்தியது.மழை தெருவுக்கு புது மணலை கொண்டு வரும். எதிர்த வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டு கோழிகள் தங்களுடைய எளிய அலகுகளால் மண்ணை கிளறுகிற சந்தோஷத்தையும் மழைதான் தருகிறது. மழை எப்பொழுதும் நல்லதே செய்யும் என்பதை ரெய்னீஸ் ஐயர் தெருகாரர்கள் நம்பினார்கள். இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசய்யா திடீரென ஆச்சரியப்படத்தக்க விதமாய் குணமடைந்து விடுவானென்று நம்பினாள் அன்னமேரி டீச்சர் ஓட்டிலிருந்து இறங்கி வரும் தண்ணீரை பிடிக்கிறதுகாக வரிசையாக பாத்திரங்களை மழையில் நனைந்துக்கொண்டே வைத்தாள்.சாம்ஸனுக்கும் மழையை வேடிக்கை பார்க்க மனம் இருந்தது. டாரதி, தாத்தாவின் கால்மாட்டில்கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டாள், மழையைப்பார்க்க.


ஆசிர்வாதம் பிள்ளையின் மனைவி ரெபேக்காள் மழை தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடாதபடி பழைய சாக்குத்துண்டுள் இரண்டை எடுத்து வாசல் நடையில் போட்டாள். மழையைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத்தோண்றுவார்கள் மழையின் போது.







வண்ணநிலவன்:




1948ல் பிறந்த வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றிய வண்ண நிலவன், தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்” திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவரது "கடல்புரத்தில்" நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல். இவரது ”கம்பா நதி” நாவல் தமிழக அரசின் பரிசை பெற்றது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள். மெய்பொருள்,காலம் இவைகள் இவரது கவிதை தொகுப்புகள்  தமிழ் நாவல்களில் மிகவும் தனித்துவமான ”ரெயினீஸ் ஐயர் தெரு” 1981ல் வெளிவந்தது. இந்த நாவலின் சமீபத்திய பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.





 

17 comments:

  1. பகிர்தலுக்கு நன்றி ஜெயமார்தண்டன்.

    தமிழ் இலக்கியத்தில் வண்ணநிலவனின் ஆளுமை மறுக்க முடியாதது."ரைநீஸ் ஐயர் தெரு",எனக்கு மிக பிடித்த நாவல்..சௌந்தர்யம் ஏந்தி இருப்பதாய் தோன்றும் அதன் மனிதர்களை போலவே!!

    நல்ல இலக்கியத்தை பகிர்ந்ததிற்கு நன்றி

    ReplyDelete
  2. பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பகிர்தலுக்கு நன்றி

    ReplyDelete
  4. எண்பதுகளின் இறுதியில் நானும் இந்த நாவலைப் படித்து கிறுக்குப் பிடித்துப் போயிருக்கிறேன். எஸ்தர் டீச்சர் என்கிற பேரே எவ்வளவு நெருக்கமானது. சாவகாசமாய் திரியும் கோழிகளோடு ரெய்னீஸ் ஐயர் தெரு அப்படியே விரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அற்புதமான பகிர்வு...நண்பரே...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. லேகா
    சித்ரா
    பாஸ்கர்
    பிரியமுடன் பிரபு
    மாதவராஜ்
    கமலேஷ்
    எல்லோருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  7. வண்ணநிலவன் எழுதிய ரெயினீஸ் ஐயர் தெரு. என்பதுகளில் கணையாழி மூலமாக சுஜாதா,பாலகுமாரனைத் தாண்டி தமிழில் வேறுவகை எழுத்து இருப்பதை நான் அறியத்தொடங்கிய காலம்.//

    நான் இன்னும் தாண்டவே இல்லைங்க..:))
    பகிர்வுக்கு நன்றி..:)

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கு நன்றி ஷங்கர்
    ஒரு முறை ரெயினீஸ் ஐயர் தெரு படித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  9. nice post, thanks for sharing.

    about vanna nilavan and rainees teru, you can read more in Leka's blog, yaalisai oru ilakkiya payananm.

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றி நாவலை படிக்கும் ஆவலை தூண்டி விட்டது. வாசிக்க வேண்டும்

    ReplyDelete
  11. கட்டாயம் படியுங்கள் மோகன். அவரின் கடல்புரத்தில்,கம்பாநதி நாவல்கள் கூட தமிழில் மிக முக்கியமான நாவல்கள்.

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. வண்ணநிலவனின் கடல்புரத்தில், எனக்கு மிகவும் நெருக்கமான நாவல் , வாங்கி குறுகிய நாள்களிலேயே பலமுறை படிக்கப்பட்டதும் கூட ... ரெயினீஸ் ஐயர் தெருவும் , அலமாரியில் இருக்கிறது , இப்பொழுது படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு .

    பகிர்தலுக்கு நன்றி நண்பரே !
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி ஜெனோவா.கட்டாயம் படியுங்கள்

    ReplyDelete
  14. பகிர்வுக்கு நன்றி! வாசிக்க வேண்டும்

    ReplyDelete