Friday, February 26, 2010

கர்ணமோட்சம்.








எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]





ஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”





அவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே! – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்து கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.

மிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.


அடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போடுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)




இரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.


தானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”




கர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு தமிழ் வலை பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.



கர்ண மோட்சம்:

தயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

இயக்கம் : முரளி மனோகர்

கதை,உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்.

இசை : இரா,பிரபாகர்

நடிப்பு : ஜார்ஜ்,யுவராஜ்,கலியமூர்த்தி,பூர்ணிமா,சண்முகம்.


சுட்டிகள்:


YOUTUBE: கர்ணமோட்சம் பகுதி:ஒன்று

YOUTUBE:கர்ணமோட்சம் பகுதி :இரண்டு





.

16 comments:

  1. பகிர்வுக்கு நன்றி. நண்பர் முரளி மனோகருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பர் முரளியின் குறும்படத்தை மிகச் சிறப்பாக அலசி உள்ளீர்கள். அவரின் ’அக்காலம்’ என்னும் மற்றொரு ஆவணப்படமும் உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வீடியோ நான் அப்லோட் செய்தது தான். கர்ணமோட்சத்தைப் பற்றி நானும் ஒரு பதிவிட்டுள்ளேன். முடிந்தால் வந்து பாருங்கள்...

    ReplyDelete
  3. நன்றி பிரசன்னா.

    உங்கள் வலைதளத்தை தொடர்ந்து பார்வையிடுகிறேன். கர்ணமோட்சம் YOUTUBE சுட்டியை உங்கள் வலைப்பக்கத்திலிருந்துதான் பெற்றேன். தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  4. கதையை வாசிக்கும் போதே மனதை அழுத்துகிறது. பார்க்க வேண்டும். நல்ல கரு. இயக்குனர் எங்க ஊர் காரர் என கூடுதல் மகிழ்ச்சி

    ReplyDelete
  5. கதையை வாசிக்கும் போதே மனதை அழுத்துகிறது. பார்க்க வேண்டும்., over busy sir, che....

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி மோகன் குமார்,ஷர்புதீன்

    ReplyDelete
  7. Nalla kathai, Padam parkka thundum ungal vimarsam koodavae youtube linkugal.. Superb...

    ReplyDelete
  8. thanks for sharing. best wishes to murali manohar. karnan has been a character i adore in Mahabaratha. lovely post (review) :) thanks all again.

    ReplyDelete
  9. நான் மிகவும் பார்த்து ரசித்த படம். படம் பார்த்துவிட்டு என்னுள் படத்தை பற்றி நிறைய எழுத வேண்டும் என்று தோன்றியது அனால் உங்கள் பதிவை படித்தவுடன் இதைவிட படத்தப் பற்றி அழகாக என்னால் எழுத முடியாது என்று முடிவுக்கு வந்தேன். அருமையான புரிதல் உங்களுடையது. படம் நெடுக குறியீடுகள் மற்றும் தெளிவான திரைகதை, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எல்லாமே.

    //(மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)//

    அருமை...இந்த காட்சியை மிகவும் ரசித்தேன். அந்த தலைமை ஆசிரியர் நான் இப்போ முட்டுகாட்ல இருக்கேன் சாயங்காலம் தான் வருவேன் என்று சொல்வார் அதில் எதாவது குறியீடு இருக்கா என்று தெரியவில்லை. கடைசியில் அவர் கவலைப் படாதிங்க கோவிந்தன் நான் உதவி பண்றேன் என்று சொல்வர் அப்போது அந்த பாடலுக்கு எதிர் மறையான பிம்பம் அந்த ஆசிரியரை பற்றி தோன்றியது.

    முரளி மனோகர் திரை துறையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. விரிவான பின்மொழிக்கும் வருகைக்கும் நன்றி மீனாட்சிசுந்தரம். தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  11. according to my opinion karna moksham could have been taken in better way.normaly karna moksham will be performed during sad occasions only and not for schools.especially story lacks lot of logic.who will dress like that and roam especially in chennai , if he is dressed up like that where his belongings.with out anyone's help no one can wear such costumes karna.

    i think the director should be keen on what he is going to convey, the message is interesting but it shold have been told in a proper way.anyway the film is not up to the mark for national ward, but on the other hand when priyamani got award for best actress for paruthiviran, y not murali for this film?!

    ReplyDelete
  12. Thanks for the visit and comment Suresh.

    I give due respect to your views. But...

    //who will dress like that and roam especially in chennai , if he is dressed up like that where his belongings.with out anyone's help no one can wear such costumes karna.//

    Yes no one roam in Chennai with this dress. This man with his கூத்து dress roaming in the urban background is give us the feel of absurdness. That is was the film try to tell us. The traditional dance form and the dancer lost their values in the urbanized , more materialistic world they look absurd. I think we can ignore that very small logical flaws considering the substance of the film .
    As far as the National award is concern I feel “ karnamotcham” and Murali are very much
    deserved to have the National award.

    Thanks for the other point of view Suresh

    ReplyDelete
  13. நான் கண்டு வியந்த படைப்புகளுள் ஒன்று இந்த கர்ண மோட்சம் ..வாழ்த்துக்கள் முரளி மனோகர் ..

    ReplyDelete
  14. கோவிந்தனின் வேதனையை உணர்ந்து தூக்கம் மறந்தேன் ..இயக்குனரின் வலியை உணரமுடிந்தது ..

    ReplyDelete