Sunday, November 21, 2010

நவநீதகிருஷ்ணனின் காதல் கதை


நவநீதகிருஷ்ணன் யாருடனும் அவ்வளவாகப் பேசமாட்டான். மரப்பாச்சியின் செதுக்கல்களையொத்த அவன் முகம் எப்போதும் இறுக்கமாகவே இருக்கும்.எனக்கென்னவோ அவன் அப்படி இருப்பதனாலேயே மிகவும் பிடித்துப் போய்விட்டது. சுவரில் சாய்ந்தபடி ஒரு கால் மடக்கி நிற்கும் அவன் முகம் ஒரு முதிர்ந்த யோகியின் முகம் போல அழகாக இருக்கும். நானும் அவனும் கணிப்பொறி தயாரிக்கும் நிறுவனமொன்றில் விற்பனைப் பிரிவில் வேலை பார்த்து வந்தோம். அலுவலகத்தில் ஒருமுறை மரியாவிடம் அவன் கோபமாக நடந்துகொண்டது முதல் எல்லோரும் அவனிடம் கொஞ்சம் இடைவெளி விட்டே பழகினார்கள். ஒரு சம்பள நாளின்போது “கடுவன் பூனை இன்னும் வரவில்லையா?” என தனலட்சுமி கேட்டபோது, அவள் நவநீத கிருஷ்ணனைத்தான் குறிப்பிடுகிறாள் என்று எல்லோருக்குமே தெரிந்தது. நான் அவளிடம் அப்படிச் சொன்னது நாகரிகமாகப் படவில்லை என்றேன் கொஞ்சம் கோபமாக. தனலட்சுமி எப்பொழுதும் பேசுவதைப் போல குழைந்தபடியே “ஒரு கேளிக்கைக்காகக் கூறினேன். பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றாள் எப்பொழுதும்போல்

என்னை ஏனோ நவநீதகிருஷ்ணனுக்குப் பிடித்துப் போய் விட்டது. ஒருவேளை நானும் தஞ்சாவூர்க் காரன் என்பது காரணமாக இருக்கலாம். இருவரும் விக்டோரியா லேஅவுட் பக்கம் தனி வீடு எடுத்துத் தங்கியிருந்தோம். எங்களுடன் பணிபுரியும் காயத்ரி சந்திரசேகர் மூலமாக அந்த வீடு எங்களுக்குக் கிடைத்தது. அவள் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருந்தது அந்த வீடு. அவளும் தமிழ்தான். மூன்று தலை முறைக்கு முன்பு பெங்களூரு வந்து தங்கி விட்ட குடும்பம். கன்னட வாசனை வீசும் தமிழில் காயத்ரி பேசுவது ஒரு தனி அழகு. அவளும்கூட நல்ல அழகுதான். அந்த வீட்டை அவள் எங்களுக்குக் காட்டிய அன்று மெரூன் கலர் பருத்திப் புடைவை கட்டியிருந்தாள். மிகவும் அழகாக இருக்கிறது என்று சொன்னபோது, சந்தோஷப் பட்டு மிகவும் வெட்கம் அடைந்தவளாய் எனக்கு நன்றி கூறினாள்

பொதுவாகவே உடை விஷயத்தில் அதிக கவனம் எடுத்து, மற்றவர்களை ஈர்க்கும் அடர்ந்த வண்ண உடைகளை அணிவதில் எனக்கு விருப்பம் அதிகம். காயத்ரி அன்று உடுத்தியிருந்த புடைவையும் நல்ல அடர்ந்த நிறம். அதனாலேயே கூட எனக்கு அந்த உடை பிடித்திருக்கக் கூடும். நானும் அதைச் சாதாரணமாகச் சொல்லவில்லை. அவளுடன் தொடர்ந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொள்ளவே அப்படிச் சொன்னேன்.



எப்போதோ ஒருமுறை நவநீத கிருஷ்ணன் “உன்னை மாதிரி கோமாளி களை, பெண்களுக்கு மிகவும் பிடித்து விடு கிறது” எனச் சொன்னது ஒரு வகையில் சரிதான். நான் எதைச் சொன்னாலும் சிரித்துக்கொண்டாள் காயத்ரி. என் மூளை முழுவதும் நிரம்பியிருந்த, எதைச் சொன்னால் சிரிக்க வைக்க முடியும் என்ற கோமாளியின் உபாயங்கள் அன்று வெகு இயல் பாகச் சரியான தருணங்களில் வந்து விழுந்து கொண்டிருந்தது. என் கவனம் முழுதும் காயத்ரி பக்கம் சாய்ந்த ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நவநீத கிருஷ்ணன் வெளியே சென்றிருக்க வேண்டும். அவனை அங்கு காணவில்லை. நான் வெகு நேரம் காயத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் திரும்பும்பொழுது அவள் வீட்டில் சாப்பிட அழைத்தாள். நவநீதகிருஷ்ணனின் முகம் நினைவுக்கு வர அவளை மறுத்துவிட்டு, வீட்டுக்காக நன்றி சொல்லி விட்டு நடந்தேன். நவநீதகிருஷ்ணன் தெரு முனையில் நின்றுகொண்டிருந்தான். நவநீத கிருஷ்ணன் அதிகம் பேசாமல் நடந்தான். காயத்ரிக்கு இன்று தூக்கம் பிடிக்காது என்றேன் சிரித்துக்கொண்டே. நவநீதகிருஷ்ணன் ஒன்றும் பேசவில்லை.



பல சமயங்களில் நவநீதகிருஷ்ணன் அப்படித்தான் நடந்துகொள்வான். அமைதியாக இருந்து விடுவது. தான் என்ன நினைக்கிறோம் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடிக்குச் செய்வதில் அவனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. சதுரங்க--ம் விளை யாடுவது போல முன்று நான்கு நகர்த்தலுக்குப் பின்னரே முதல் நகர்த்தலின் அர்த்தம் புரிபடும். பல சமயங்களில் அதுவும் கூட புரியாது. அவன் போக்கை எதிர்கொள்வது ஆரம்ப நாட்களில் கஷ்டமாகத்தான் இருந்தது. ஒருமுறை நான் அவனை ‘அடைகோழி’ எனக் கூப்பிட்டதுக்காக என்னோடு இரண்டு நாள் பேசாமல் இருந்தான். அலுவலகம் முடிந்தவுடன் நேராக அறைக்குத் திரும்பி விடும் அவன் பழக்கத்தைக் கிண்டல் செய்யும் விதமாக நான் அப்படிக் கூப்பிட்டேன். எப்பொழுதாவது மிக அரி தாகவே அவன் வெளியே செல்வான். தொலைக்காட்சியோ, ரேடி யோவோ இல்லாத அறையில் எப் படி வெறுமனே காலம் கழிக்க முடியும் என்பது எனக்கு ஆச்சர்ய மூட்டும் விஷயமாக இருந்தது. நவநீத கிருஷ்ணன் நிறைய புத்தகங்கள் படிப்பான். சாயங்காலப் பொழுதுகள் அவனுக்குப் புத்தகங்களுடனே கழிந்தது.



ஒரு சமயம் கமர்ஷியல் ரோட்டில் திரிந்துகொண்டிருக்கும் பொழுதுதான் பார் வதியைப் பார்த்தேன் அந்தச் சமயம் அவள் பெயர் கூட எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு அவள். ஒரு வயதான பாட்டியோடும் சின்னக் குழந்தையோடும் அவள் தங்கியிருந்தாள். துணி காயப்போடும் பொழுதோ அலுவலகத்துக்குப் புறப்படும் நேரத்திலோ அவளைப் பார்ப்பேன். ஒரு முறை பக்கத்து மளிகைக் கடையில் அவளைப் பார்க்க நேர்ந்தது. லேசாகப் புன்னகைத்து வைத்தேன். அவளும் சிரித்தமாதிரிதான் தோன்றியது. கமர்ஷியல் ரோட்டில் அவளைப் பார்த்த பொழுது முகமன் செய்தேன். பதிலுக்கு அவள் சிரித்தாள். வரும் மாதத்தில் தன் குழந்தைக்குப் பிறந்ததினம் வருவதாகவும் அதற்காக ‘ஷாப்பிங்’ வந்ததாகவும் கூறினாள். மெல்ல நடந்தோம். அவள் பேசிய ஆங்கிலத்தில் மலையாள வாடை வீசியது. “நாடு எவிட”? என்றேன் திடீரென. அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் நான் அப்படிக் கேட்டதில். ஏதோ ஓர் ஊரின் பெயரைச் சொன்னாள். தக்கலை அருகே இருக்கும் ஊர். அவள் காரைத் தெரு முனையில் நிறுத்தியிருந்தாள். அவள் கணவன் ஒரு மத்திய அரசு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இறந்து விட்டதாகக் கூறினாள். அதே நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் இப்பொழுது அவளுக்கு வேலை.



நான் எவ்வளவோ மறுத்தும் என்னை காரில் வரச் சொன்னாள். நான் இடையிடையே பேசின மலையாள வார்த்தைகளின் உச்சரிப்புகளுக்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்தாள். பழைய ஹிந்திப் படக் கதா நாயகிகள் மாதிரி பெரிய கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொள்வது அவள் வழக்கம். அது அவளுடைய வயதை மேலும் கூட்டிக் காட்டுவதாக இருந்தது. அவளின் முகவடிவுக்குச் சிறிய சட்டம் கொண்ட கண்ணாடி மிகவும் பொருத்தமாக இருக்கும் எனச் சொன்னேன். அப்படியா என்றாள்... மிகவும் சிந்தனை வயப்பட்டவளாய். தெருவில் நான் இறங்கியபோது, நவநீதகிருஷ்ணன் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.



நான் கண்களைச் சிமிட்டி நவநீதகிருஷ்ணனைப் பார்த்து சிரித்தேன். அவன் கண்டு கொள்ளவேயில்லை. கையில் இருந்த புத்தகத்தைப் படிப்பதில் மும்முரமாக இருந்தான். உண்மையில் அவன் கவனம் அங்கில்லை எனத் தோன்றியது எனக்கு. அனேக மாகத் தெருவில் எல்லா வீடுகளும் அமைதியாகி விட்டிருந்தன. நான் படுக்கைக்குப் போகும் முன் நவநீதகிருஷ்ணனைப் பார்த்தேன். புத்தகம் வாசல் படியில் கவிழ்ந்து கிடந்தது. நவநீதகிருஷ்ணன் வானத்தைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். முகம் இறுக்கமாக இருந்தது.



மறுநாள் திருநெல்வேலி ரெட்டியார் விடுதியில் சாப்பிடும் பொழுது நவநீத கிருஷ்ணன் “மனசுல பெரிய ரோமி யோன்னு நெனப்பா” என்றான். நான் சிரித்தேன். “உதை பட்டா தெரியும்” என்றான் தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் அப்படிச் சொல்வது முதல் முறையில்லை.



அலுவலகத்தில் கலாட்டாக்களுக்குப் பஞ்சமில்லை. நவநீத கிருஷ்ணன் பொதுவாக இந்தக் கலாட்டாக்களில் அதிகம் கலந்துகொள்ள மாட்டான். ஒருமுறை மரியாவிடம் அலு வலக வேலை நிமித்தமாக ஏதோ பேசிக் கொண்டிருக்கும்பொழுது எப்பொழுதும் போல கண்களைத் தாழ்த்தி மேஜையைப் பார்த்துக்கொண்டே அவன் பேசினான். மரியா அவன் தாடையில் கைவைத்து முகத்தை நிமிர்த்தி, “இப்போது சொல்” என்றாள். யாரோ பின்னால் சிரித்தார்கள். நவநீத கிருஷ்ணன் வேகமாக மரியாவின் கைகளைத் தட்டிவிட்டு நகர்ந்தான். அவன் அதிலிருந்து மரியாவிடம் பேசுவதில்லை. அதற்கு அவ்வளவு பெரிதாக நடந்துகொண்டிருக்க வேண்டாம் சாதாரண கேலியாக எடுத்துக்கொண் டிருக்கலாம் என நான் சொன்னபோது, என்னிடமும் கோபப்பட்டான் நவநீதகிருஷ்ணன்.



மரியா அதன் பின்னரும் நவநீதகிருஷ்ணனிடம் தன்னுடைய கேலியையும் கிண்டலையும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தாள்.



ஒரு சாயங்காலம் பார்வதியின் குழந்தைக்குக் காய்ச்சல் என்று அவ ளோடு பக்கத்து மருத்துவமனைக்குச் சென்றுவந்தேன். வீடு திரும் பியபோது வீடு பூட்டியிருந்தது. எனக்கு ஆச்சர்யம். நவநீதகிருஷ்ணன் வெளியே சென்றிருக்கிறான் என்பது புதிதான விஷயமாக இருந்தது. என்னிடம் ஒரு சாவி இருந்த தால் மழையில் நனையாமல் தப் பித்தேன். நவநீதகிருஷ்ணன் மழையில் நனைந்துகொண்டே வந்து சேர்ந்தான். “நல்ல மழை” என் றான். எங்கே சென்று வந்தான் என்று அவனாகச் சொல்வான் என எதிர்பார்த்தேன். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “புத்தகக் கடைக்குப் போயிட்டு வர்றீயா?” என்றேன். ஏதாவது சொன்னால் அவனிடமிருந்து பதில் வரும் எதிர்பார்ப்பில்... “இல்லை சும்மா வெளியே போயிட்டு வந்தேன்” என்றான் பொதுவாக.



அதன்பின் வந்த நாட்களில் யதார்த்தமாக நவநீதகிருஷ்ணனைக் கவனிக்கத் தொடங் கினேன். அவன் போக்கில் பெரிய மாறுதல் கள் தென்பட்டது. பெரும்பாலும் அவன் அலுவலகம் முடிந்து நேரே வீட்டுக்கு வருவதில்லை என்பதை கவனித்தேன். என்னிடம் சொல்லிக்கொண்டோ, சொல்லாமலோ திடீரென அலுவலகத்திலிருந்து அவன் காணாமல் போனான். இரவு அவன் வீடு திரும்புவதற்கு வெகுநேரமானது. ஒரு சனிக்கிழமை கெங்கம்மா வீடு பெருக்கும்பொழுது இரண்டு சினிமா டிக்கெட் குப்பையோடு குப்பை யாகப் போனது. நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நானும் காயத்ரியும் போன டிக்கெட்டாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.



ஆனால் மறுவாரமே மேஜையில் கசங்கிய நிலையில் இரண்டு டிக்கெட் கிடந்தது. நான் ஒரு தமிழ் திரைப் படத்தின் பெயரைச் சொல்லி அந்தப் படத்துக்குச் சென்றிருந்தாயா? என கேட்ட பொழுது தலையசைத்துக் கொண்டே நகர்ந்து கொண்டான் நவநீதகிருஷ்ணன். மேலும் நான் எதுவும் கேட்டு விடக் கூடும் என்று அவன் எண்ணியிருக்கலாம்.



ஒருமுறை தலை வாரிக் கொள்ளும் சமயம் அவன் சீழ்கை அடிப்பதை ஆச்சர்யத் துடன் பார்த்தேன். அப்படி யெல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்லை. நவநீதகிருஷ்ணனை ஏதோ ஒன்று உள்ளி ருந்து ஆட்டுவது போல இருந்தது எனக்கு. நான் பார்ப் பதைக் கண்ணாடியில் அவன் கவனித்திருக்க வேண்டும். உடனே நிறுத்திக் கொண்டான். அவன் வெளிர்நிற உடைகள் அணிவதைத் தவிர்த்ததை ரெட்டியார் கவனித்து, “என்ன மாப்பிள்ளை கணக்கா உடுத்திரிய... ஏதும் விசேஷமா?” என்றார் ஒருநாள். நவநீத கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டான். அவன் ஏதோ கனவு உலகில் மிதந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.



பொதுவாக ஊருக்குப் போகும்பொழுது நானும் நவநீதகிருஷ்ணனும் சேர்ந்துபோவது வழக்கம். அந்தமுறை கிருஸ்துமஸ் விடு முறைக்கு நவநீதகிருஷ்ணன் வரவில்லை. நான் மட்டும் தஞ்சாவூருக்குப் போய் வந்தேன். நவநீதகிருஷ்ணன் வராததுக்குப் பெரிதாக ஒன்றும் காரணம் சொல்லவில்லை.



“ எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்றான். நான் விரிவாக ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. நான் சில விஷயங்களை அனுமானித் திருந்தேன். நான் ஊரிலிருந்து வந்தபொழுது அவன் படுக் கையில் புக்கர் பரிசு பெற்ற இந்தியர் ஒருவரின் நாவலும் “கூணி ஓகீஐகுஏ” என முகவரி இடப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையும் கிடந்ததை கவனித்தேன். என்ன வாழ்த்து அட்டை என்று தெரியவில்லை. கிருஸ்துமஸ் அல்லது புத் தாண்டு வாழ்த்துக்களாக இருக் கலாம். நான் யோசனையோடு குளிக்கச் சென்றேன். நான் திரும்பியபோது அது அங்கு இல்லை. நான் சிரித்துக்கொண் டேன் நானும் இது மாதிரியான திருட்டுத்தனங்களைச் செய்தவன்தானே. நவநீதகிருஷ்ணனிடம் நேரடியாகக் கேட்டு விடுவதற்கான நேரம் வந்து விட்டதாக நினைத்தேன்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் எங்காவது வெளியே போக லாமா என்றேன் நவநீதகிருஷ்ணனிடம். அவன் தலையசைத்தான். கப்பன் பார்க் சாலையோரம் நடந்து சென்றோம். அவன் மௌனமாக நடந்து வந்தான். நான் என்ன கேட்கப் போகிறேன் என்பதை யூகித்து, யோசனையோடு நடந்து வந்ததுபோல இருந்தது. நானும் அதிகம் பேசவில்லை. எப்படித் தொடங்குவது என யோசித்த படியே நடந்துகொண்டிருந்தேன். ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தோம். நானும் காயத்ரியும் தேர்ந்தெடுத்த இடம் அது. வாகன சந்தடி அதிகம் இல்லாத இடம். எங்கிருந்தோ ஆரம்பித்தேன். பெங்களூருவில் நிலவும் புது வருட கொண்டாட்டம் பற்றியெல்லாம், தஞ்சாவூரில் இடிக்கப் பட்ட ஒரு பழைய தியேட்டர் பற்றி, விற்பனை இலக்கு கொடுக்கும் மன அழுத்தம் பற்றி என ஏதேதோ பேசிக் கொண்டே போனேன். கேள் வியைக் கேட்பதற்கான தரு ணம் நெருங்கிவிட்ட தாக மனது சொடுக்கிய ஒரு தருணத்தில் அவன் சாயங்கால வேளையில் வெளியே செல்வது எனக்கு ஆச்சர்யமாக இருப்பதாகக் கூறி நிதானித்தேன். நவநீதகிருஷ்ணன் தலைகுனிந்து கொண்டு மெல்ல சிரித்தான். நான் அவன் இடுப்பைக் கிள்ளினேன். ஒரு பெண் தன்னைக் காதலிப்பதாக மிகுந்த வெட்கத்தோடு சொன்னான் நவநீத கிருஷ்ணன். நான் ஆர்ப்பாட்டமாய் கத்தினேன். வழியே சென்ற ஒரு இளம்பெண் திரும்பிப் பார்த்துச் சென்றாள்.



அன்று இரவு திரும்பும் வழியில் நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓர் உணவகத்தில் உணவு சாப்பிட்டு அவன் காதலைக் கொண்டாடினோம். அவளை எனக்கு அறிமுகப்படுத்துவதாகக் கூறியபோது மணி ஒன்றைத் தாண்டியிருந்தது.



அதன் பின்னால் நாங்கள் தினமும் உறங்குவதற்குப் பின்னிரவாகிப் போனது. நவநீதகிருஷ்ணனுக்குப் பேசுவதற்கு நிறைய இருந்தது. சில சமயம் அவன் வேறு உலகத்தில் இருப்பது போல உணர்ந்தேன். அவள் பிறந்த நாளுக்கு எப்படி ஆச்சர்யப்படுத்தலாம் என என்னிடம் யோசனை கேட்டான். பொங்கலுக்குப் பின் வந்த ஒரு வாரத்தில் அவள் பிறந்தநாள் வந்தது.



அதிகாலையிலேயே கிளம்பிவிட்டான். அன்று அவர்கள் இருவரும் பிருந்தாவனம் போவதாகத் திட்டம். நவநீதகிருஷ்ணன் சென்றபின் நன்றாகத் தூங்கினேன். அன்று அலுவலகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமை என நினைவு. சாயங்காலமாக வெளியே கிளம்பினேன். காயத்ரியை எம்.ஜி. ரோட்டில் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திப்பதாகக் கூறியிருந்தேன். பேருந்தில் அதிக கூட்ட மில்லை, விடுமுறையின் காரணமாக இருக்கலாம். பேருந்து எம்.ஜி.ரோட் டுக்குத் திரும்பும் நேரத்தில் தான் நான் பார்த்தேன். பேருந்து நிறுத்த பெஞ்சில் நவநீதகிருஷ்ணன் உட்கார்ந்திருந்தான். மிகவும் தளர்ந்து போயிருந்தான். எனக்குக் குழப்பமாக இருந்தது.



நவநீதகிருஷ்ணனுக்கு ஃபோன் செய்தேன். நவநீதகிருஷ்ணனின் குரல் உற்சாகமாக இருந்தது. அவனும் அவளும் மைசூரிலிருந்து புறப்பட்டுக் கொண் டிருப்பதாகவும், அன்றைய பொழுது இனிமையாகச் சென்றதாகவும் சொன்னான். எனக்கு மெல்ல புரிபடத் தொடங்கியது. நவநீதகிருஷ்ணன் ஏதேதோ பேசிக்கொண்டே சென்றான். துக்கத்தின் வலி மிகவும் பாரமாக இருந்தது. பேருந் தின் பின்புறக் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். தூரத்தில் யாருமே அற்ற பெரிய வெளியில் நவநீதகிருஷ்ணன், அமர்ந்திருந்தான் மிகத்தனியாக. இருள் கவிழ்ந்துகொண்டிருந்தது. நவநீத கிருஷ்ணன், வீடு திரும்ப வெகு நேரமாகலாம்.


  நன்றி :








8 comments:

  1. அருமை நண்பரே. சில விஷயங்களை பூடகமாக சொல்லாமல் சொல்லி உள்ளீர்கள். மிக ரசித்தேன். நண்பனுக்கு காதலி இருக்கும் போது அருகில் உள்ள நண்பனுக்கு ஏற்படும் காம்ப்ளக்ஸ் மிக சரியாக கொண்டு வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக நெருக்கமாக நான் கடந்து வந்த ஒரு சில சம்பவங்களை கதையாக படிக்கும் போது ஒரு நாட்குறிப்பு படிப்பதாகவே உணர்கிறேன். தனக்குத்தானே கடிதம் போட்டுக்கொண்ட நண்பனின் மனநிலையை இப்போது புரிந்துக்கொள்ள முடிகிறது. அட்டகாசமான narration!

    ReplyDelete