Friday, February 26, 2010

கர்ணமோட்சம்.








எந்த ஒரு கலை வடிவமும் கால நீட்சியில் நிகழும் மாற்றத்தின் புழுதியில் தன் சாரத்தை இழந்து தனிமைப்படும்பொழுது அதை சார்ந்து இயங்கும் கலைஞனின் வாழ்வு அவன் அளவிலும் மற்றவர் பார்வையிலும் அர்த்தமற்றதாகி விடுகிறது. ஒவ்வோரு காலகட்டமும் வாழ்வைப்பற்றிய பொதுவான ஒரு பார்வையை அதன் சமூகத்திடமிருந்து உருவாக்கிக்கொள்கிறது. பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல் உய்வும் , எந்த வித நோக்குமற்ற கேளிக்கையும் நம்முடைய “ஊடக காலத்து” வாழ்வியல் பார்வையாக இருக்கும் பிண்ணனியில் ஒரு தெருகூத்து கலைஞனின் வாழ்வை முன் வைக்கிறது முரளி மனோகர் இயக்கிய “ கர்ணமோட்சம்” என்ற குறும்படம். [இந்த வருடம் கலை மற்றும் கலாச்சார பிரிவில் தேசிய விருதை பெற்றகுறும்படம்]





ஒரு பள்ளியில் தன் கர்ணமோட்சம் கூத்தை நிகழ்த்திக்காட்ட இருங்கூர் என்ற கிராமத்திலிருந்து சென்னைக்கு தன் மகனுடன் – அவனுக்கு கிரிக்கெட் மட்டையும்,பந்தும்,வெள்ளை தொப்பியும் கூத்து முடிந்ததும் வரும் பணத்தில் வாங்கிதருவதாக வாக்கு - வருகிறான் கோவிந்தன் என்ற கூத்து கலைஞன். வரும் வழியிலேயே தன்னை கர்ணனாக வேசம்கட்டிக்கொண்டு பள்ளிக்கு வரும் கோவிந்தன் ,பள்ளி தாளளர் இறந்து விட்டதால் பள்ளி விடுமுறை என அறிந்து என்ன செய்வது என்றறியாது நிற்கிறான். பள்ளியின் தலைமை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஊருக்கு திரும்பி செல்லக்கூட பணமில்லாத நிலையை கூற தலைமையாசிரியர் தான் வெளியே இருப்பதாகவும் சாயங்காலம் வீட்டிற்கு வந்தால் உதவுவதாகவும் கூறுகிறார். கோவிந்தனுக்கு வேறு வழியில்லை. காத்திருப்பதை தவிர. பசியோடிருக்கும் தன் மகனுக்கு ஒரு வடை வாங்கிகொடுத்துவிட்டு தண்னீர் குடித்து பசியாறுகிறார் “கர்ணன்”. அந்த தேநீர் கடையில் வேலை செய்யும் ஊமை சிறுமிக்கு கர்ணனின் பசி தெரிந்திருக்கவேண்டும். தெரு பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு அமர்ந்திருக்கும் “கர்ணனு”க்கு சாப்பிட கொடுக்கிறாள் அவள். கையேந்தி பெற்றுக்கொள்கிறார் “ கர்ணன்”





அவரைப்பற்றி அவள் கேட்க கோவிந்தனுக்கு உற்சாகமாகிவிடுகிறது –அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஒரு ஜீவனாவது இருக்கிறதே! – தான் அவள் வயதில் செஞ்சி துரைசாமி தஞ்சிரானிடம் கூத்து கற்றுக்கொண்டதையும். தான் கூத்தில் கர்ணன் வேசம் கட்டுவதையும் தான் பாட ஆரம்பித்தால் விடிய விடிய ஊரு சனம் மொத்தமும் கேட்கும் என் கூறிக்கொண்டே வ்ருபவர்“இப்பொழுதெல்லாம் யார் இருக்கா இதல்லாம் பார்க்க எல்லாத்தையும் டி.வி பொட்டி இழுத்துக்குச்சே” என்கிறார் ஏக்கத்துடன். ஒரு உற்சாகத்துடன் அந்த ஊமை பெண்ணிற்கு கூத்தை கற்றுக்கொடுக்க தொடங்குகிறார்.தன் குருவிற்கு வணக்கம் தெரிவித்து. அந்த சமயம் அங்கு வரும் தேநீர் கடைகாரன் அவள் முகத்தில் தண்ணீரை விசிறியடித்து அவளை இழுத்துச்செல்லும் பொழுது .“நாலு இட்லி வாங்க காசில்லாமல் தெரு தெருவாக சுத்துகினு இருக்கிற இதுல இவளுக்கு கூத்து கத்து குடுக்க போரியா போய்யா ஒ வேலய பாத்துக்கிட்டு” என கூறி “கர்ணனை” கிட்டதட்ட ஒரு பிச்சைகாரனாகவே ஆக்கிவிட்டுப்போகிறான்.

மிகவும் வேதனையுடன் அங்கிருந்து நடந்து செல்லும் கோவிந்தனை ஓடி வந்து வழி மறைக்கிறாள் அந்த ஊமை சிறுமி. கர்ணன் அவளையே பாக்கிறார். அவள் தன் கைகளை நீட்டி அவருக்கு ஏதோ கொடுக்கிறாள். கர்ணன் அதை கை நீட்டி வாங்குகிறார் கோவிந்தன். ஒரு ரூபாய் நாணயம். குரு தட்சணை. அவள் தன் குருவிற்கு குரு வந்தனம் செய்து ஓடுகிறாள். கோவிந்தன் அவளைப்பார்த்த வண்ணம் நிற்கிறார். இருக்கலாம் அந்த நிமிடம் கோவிந்தன் -கர்ணன்- மனம் மோட்சம் அடைந்திருக்கலாம். மெல்ல நடந்து போகும் கோவிந்தன் எதிர்படும் பள்ளி சிறுவர்களிடம் “ நான் கர்ண மஹாராஜா” என கூறி தன் கிரீடத்தை கழட்டி குடுத்துவிட்டு போகிறார். கிரீடம் தன் தன்மையை இழந்து அந்த சிறுவர்கள் கையில் விளையாட்டு பொருளாகிபோகிறது. அது அவருக்கும் இந்த சூழலுக்கு பொருந்தா விசயமாக பட்டிருக்கவேண்டும்.


அடுத்த தலைமுறையின் ரசனையும் அவர்களது உலகமும் கோவிந்தனுக்கு புரிவதில்லை. அடுத்த தலைமுறை தன் வாழ்வோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் விசயங்களிலிருந்து உருவாகப்போகும் மலினமான வாழ்வியல் பார்வை நம் கண்முன்னே நிகழ்ந்துக்கொண்டிருக்கும் நிதர்சனம். கோவிந்தன் மகன் கையில் ஒரு பொம்மை செல்போன் கிடைக்கிறது. அதை “அதிஷ்டம்” என சந்தோஷப்படும் அவன், முதலாய் தொடர்புகொள்வது சச்சின் டெண்டுல்கரை. பின் அவன் “பெப்ஸி” உமாவை தொடர்புகொண்டு பேசுகிறான் “ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.......விஜய் படத்திலேந்து பாட்டுப்போடுங்க” கிரிகெட்,சினிமா இவற்றை ஆதர்சனமாகக்கொண்டு கேளிக்கையும் அந்த நேர சந்தோஷத்தை மட்டும் பிரதானமாய் கொள்ளும் தட்டையான தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் உழன்று கிடக்கும் அடுத்த தலைமுறைக்கும் கோவிந்தனின் கலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி நிறப்பமுடியாத பெருவெளி. (மற்றோரு இடத்தில் தலைமையாசிரியரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் கோவிந்தன்Ring Ring Tone ஆக எதிர்கொள்ளும் பாட்டு : “ வாள மீனுக்கும் , விலங்கு மீனுக்கும் கல்யாணம்....” இந்த பாடல் மூலமாக அந்த தலைமையாசிரியரைப்பற்றி இயக்குனர் நம் மனத்தில் எழுப்பும் பிம்பம் அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு)




இரண்டாவது கிளாஸ் தண்ணீர் கேட்ட கோவிந்தனை விரட்டுகிறான் தேநீர் கடைக்காரன். அவனுக்கு வாழ்க்கை பணம் சார்ந்தது உறவுகள்,நிகழ்வுகள் எதையுமே பண வடிவாய் புரிந்துக்கொள்பவன். அவனைப்பொருத்தவரை அந்த கூத்துக்காரன் “இடத்தை அடைத்துக்கொண்டு “ வியாபாரத்தை கெடுக்கும் இடையூறு. கோவிந்தனால் நூறு ரூபாய்க்கு வியாபாரம் நடந்தால் அவனால் கோவிந்தனையும், அவன் கூத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும்.அப்படி இல்லாத பட்சத்தில் எந்த கலைவடிவமும், கலைஞனும் அவன் வாழ்க்கைக்கு தேவையில்லாத வஸ்துக்கள். நம் காலத்து மனசாட்சியாக இருக்கிறான் அவன்.


தானும் தன் கலையும் கால மாற்றத்தில் தனிமைப்பட்டு போவதும், உறவுகளின் எதிர்பார்புகளை நிறைவேற்றமுடியாதசரிவும், தன்கென்றிருந்த வெளி இல்லாமல் போகும்பொழுது ஏற்படும் சூன்யமும் “ கர்ணமோட்சம்” முழுவதும் நிறைகிறது. பொருளாதாரம்,அர்த்தமற்ற வெற்று கேளிக்கை சார்ந்து இயங்கும் நம் கால சூழலில் பொருத்திக்கொள்ளமுடியாமல் திணரும் எந்த கலைக்கும்,கலைஞனுக்கும் பொருந்தும் “ கர்ணமோட்சம்”




கர்ணமோட்சம் குறும்படத்தை இயக்கிய முரளி மனோகர். பிறந்தது கும்பகோணம். படித்த்து ,வளர்ந்தது திண்டிவனம்.தமிழ்நாடு திரைப்படகல்லுரியில் இயக்குனர் பட்டய படிப்பு. இவரது மற்ற குறும்படம்” அக்காலம்” ஜெமினி ஸ்டியோ கேண்டீனில் வேலைப்பார்த்த ஏ.என்.எஸ்.மனியனைப்பற்றிய,அவர் நினைவுகள்பற்றிய ஆவணப்படம். கர்ணமோட்சம் தமிழ்நாடு அரசின் விருதையும் இந்த வருடம் மத்திய அரசின் விருதையும் பெற்றது. தற்சமயம் திரைப்பட துறையில் உதவி இயக்குனராக பணிபுரியும் முரளி மனோகருக்கு தமிழ் வலை பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.



கர்ண மோட்சம்:

தயாரிப்பு : எம்.ஜீ.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்.

இயக்கம் : முரளி மனோகர்

கதை,உரையாடல் : எஸ்.ராமகிருஷ்ணன்.

இசை : இரா,பிரபாகர்

நடிப்பு : ஜார்ஜ்,யுவராஜ்,கலியமூர்த்தி,பூர்ணிமா,சண்முகம்.


சுட்டிகள்:


YOUTUBE: கர்ணமோட்சம் பகுதி:ஒன்று

YOUTUBE:கர்ணமோட்சம் பகுதி :இரண்டு





.

Thursday, February 18, 2010

ரெயினீஸ் ஐயர் தெரு

என் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் : 1

ரெயினீஸ் ஐயர் தெரு



வண்ணநிலவன் எழுதிய ரெயினீஸ் ஐயர் தெரு. என்பதுகளில் கணையாழி மூலமாக சுஜாதா,பாலகுமாரனைத் தாண்டி தமிழில் வேறுவகை எழுத்து இருப்பதை நான் அறியத்தொடங்கிய காலம். அது மாதிரியான எழுத்துக்களை தஞ்சாவூர் மைய நூலகத்தில் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு நாள் என் கையில் கிடைத்த சின்ன புத்தகம். ரெயினீஸ் ஐயர் தெரு. “இதை படிப்பவன் முட்டாள்” என முதல் பக்கத்தில் யாரோ கிறுக்கிவைத்திருந்தார்கள். அந்த நாவலை நான் படித்து முடித்த சாயங்கால வேளை இன்னும் என் நினைவில். மனதளவில் திடீரென நான் மிகவும் முதிர்வு கொண்டவனாகவும், பெரிய மனிதனைப்போலவும் நடந்துக்கொண்டேன், சாம்சஸன் அண்ணனை எஸ்தர் சித்தியோடு தவறான நேரத்தில் பார்த்து விட்ட மூன்றாவது வீட்டு அற்புதமேரியைப்போல.

அந்த நிகழ்விற்கு பிறகு அற்புதமேரி எப்போதையும் விட அண்ணனிடமும்,எஸ்தர் சித்தியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துக்கொண்டாள்.வகுப்பில் கூட பெரிய முதிர்ந்த பெண்னைப்போல நடந்துக்கொண்டாள். எஸ்தர் சித்தி எப்போதும் போல அளவற்ற ஆனந்தத்தையும் அமைதியையும் ஊரிலிருந்து கொண்டுவந்து காட்டிவிட்டு எடுத்துக்கொண்டுப்போனாள். எஸ்தர் சித்தியின் ப்ரியம் எல்லா கசடுகளையும் தூர வீசி புது மணலை தெருவுக்குள் வாரி இறைக்கும் மழைப்போல இருக்கும். ரெய்னீஸ் ஐயர் தெருவில் முதல் வீட்டு டாரதிக்கும், அவள் எதிர் வீட்டு இருதயம் டீச்சருக்கும் மழையில் நனைய பிடிக்கும். ஆனால் இருதயம் டீச்சர் பெரியவளாகவும், ஆசிரியையாகவும் இருக்கும் பொழுது எப்படி மழையில் நனையமுடியும்?

இருதயம் டீச்சருக்கு எப்பொழுதும் வீட்டைப்பற்றிய நினைவுதான்.தன்னுடைய வீடு அலங்கோலமாக இறைந்துகிடக்க தன் புருஷனும்,மாமியாரும் ஊரிலேயே மிக மோசமான அழுக்கு உடைகளை உடுத்திக்கொண்டு திரிவது போலவோரு தவிப்பு எங்கேபோனாலும் கூடவே இருக்கும் கோழிகள் வேறு வீடு முழுக்க இருந்து வைக்கும். இருளும்,அழுக்குமான இந்த வீட்டில் இருதயம் டீச்சரின் புருஷன் சேசய்யாவின் இருமல் சப்தம் தொடர்ந்துக்கேட்கும். நெஞ்சு எலும்பெல்லாம் மூச்சு முட்டிப்போய் நொறுங்கி விழுவது போல குலுங்கி இரும்முவான். நேரம் ஆக ஆக தெருவே இடிந்து விழுவது போல அவனுடைய சப்தம் கூடிக்கொண்டே போகும். அவன் அம்மாவிற்கு இதெல்லாம் பழகிப்போய்விட்டது. இருதயம் தான் தன் காரியங்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி வருவாள் அவனுடைய நெஞ்சை தடவிக் கொடுப்பாள். தன் தோளில் அவனை சாற்றியவாறே நட்த்திக்கொண்டுபோய் கட்டிலில் படுக்கவைப்பாள். அவள் சேலையில் கண்ணீர் துளிகள் தெரிக்கும். அவன் அழுகிறான் போல. இருதயம் டீச்சர் அவன் முகத்தை தூக்கிபார்ப்பாள். சவரம் செய்யாத அவன்முகத்தை கைகளில் ஏந்திய படியே சேலைத்தலைப்பை இழுத்து கண்ணகளை துடைத்து விடுவாள் அவனை அந்த நேரத்தில் தன் பிரியமான ஆண்குழந்தையாகவே நினைத்தாள். வெகு நேரம் வரை தோளில் சாற்றியபடியே கட்டில் விளிம்பிள் உட்கார்ந்திருந்தாள். எதிர் வீட்டு டாரதி முன் வாசலில் தெரு நடைக்கல்லில் தெருமுனையை பார்த்தமாதிரி உட்கார்ந்திருந்தாள்.

தெரு முனையில் இருதயம் டீச்சர் வீட்டு பெட்டைகோழிகுஞ்சுகள் இரண்டு இரை பொறுக்கிக்கொண்டிருந்தன. டாரதிக்கு அந்த கோழி குஞ்சுகள் அப்படி மேய்ந்துக்கொண்டிருப்பது ஏனோ டாரதிக்கு மிகுந்த துயரத்தை தந்தது. அந்த கோழிகுஞ்சுகள் தன்னந்தனியே அனாதரவாகத் தங்கள் வாழ்நாளை கழித்து வரும் படி ஆனது போல தோண்றியது.சிறு வயதில் தாயை இழந்து பெரியம்மா வீட்டில் வளரும் அவளுக்கு பிறந்த கொஞ்சம் நாட்களிலேயே தாயைப்பிரிந்து தனியே இரை பொறுக்கித்திரியும் கோழிகுஞ்சுகளை பார்க்க துயரமாக இருக்கிறது. துயரமானமான இந்த வாழ்வின் ஊடே அவளின் தருணங்களை சந்தோஷமாக்கவும் அர்த்த படுத்திக்கொள்ளவும் சில மனிதர்களால், அவர்களின் பிரியத்தால் வாய்கிறது. எபன் அண்ணனின் நினைப்பும்,அருகாமையும் டாரதிக்கு சந்தோஷம் தருபவை.எபன் அண்ணனின் “ ரெயினீஸ் தெருக்காரர்களும் சாணை பிடிப்பவனும்” என்ற கவிதை ஒரு பத்திரிக்கையில் வெளிவந்த பொழுது டாரதிக்குதான் எவ்வளவு சந்தோஷம். தெருவில் எல்லா வீடுகளுக்கும் அலைந்து அதை சந்தோஷமும் பெருமையும் பொங்க படித்துக்காட்டி வந்தாள் அவள். சிறு வயதில் அம்மாவை சாக்கொடுத்து அப்பாவால் அடுத்த வீட்டில் வளர விட்டப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த அன்பையும் இரக்கத்தையும் விட பெரிது ஒன்றும் இல்லை. இதையெல்லாம் அவள் எபன் அண்ணன் மூலமாக அவள் பெற்றுக்கொண்டாள். எபன் அண்ணனின் அன்பு மட்டும் இல்லையென்றால் டாரதி என்ன செய்ய முடியும்? தியோடர் அண்ணன் போல துயரங்களை மறக்க குடித்துவிட்டு கிடக்கமுடியுமா என்ன அதுவும் ஒரு பாதிரியார் வீட்டு பெண்!

அற்புத மேரியின் வீட்டிற்கு எதிர் வீடுதான் தியோடர் அண்ணனின் வீடு. அன்னமேரி டீச்சரின் பையன். அன்னமேரி டீச்சர் சேலையை தொடைக்கு மேலே திரைத்துக்கட்டிக்கொண்டு வீட்டுக்குள் நடமாடிக்கொண்டிருப்பாள் பக்கத்து வீட்டு சேசையா தொடர்ந்து இருமும்பொழுதெல்லாம் ரோட்டிற்கு வந்து இருதயம் டீச்சரிடம் கவலைப்பட்டு திரும்பும்பொழுதெல்லாம் அற்புத மேரியின் கண்கள் எதிவீட்டைப் பார்க்கும். ஜன்னலுக்குளேயிருந்து சாம்சனின் முகம் தெரியும். அவன் இவளையே பார்த்துக்கொண்டிருப்பான். அன்னமேரி தியோடரை கவனிப்பதே இல்லை அவளின் மருமகள் எலிசபெத் இறந்ததிலிருந்தே தியோடர் குடிப்பதும் திண்ணையில் கிடப்பதும் ரெய்னீஸ் ஐயர் தெருவில் சகஜமான விசயமாகிவிட்து. யாரும் தியோடரை மதிப்பதில்லை. எபனுக்கு தியோடரை , அவன் அன்பை புரிந்துக்கொள்ளமுடியும். நாலாவது வீட்டு கிழ தம்பதிகள் ஆசீர்வாதம்-ரெபேக்காள் இவர்களுக்கும் தியோடரை பிடிக்கும்.



ஒவ்வொரு மழைக்கும் ஆசீர்வாத்த்தின் வீடு இடிந்தும் சிதிலமாகிக்கொண்டும் இருந்தது. அவர்கள் மகன் அனுப்பும் மணியாடரை கொண்டு வரும் தபால்காரனைத்தவிர யாரும் அவர்கள் வீட்டிற்கு வருவதில்லை. ஒரு மழையில் கிழவிக்கு காயம் பட தியோடர் தான் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றான். வெறும் அடுப்பங்கரையில் ஒடுங்கி வாழ்ந்த அந்த தம்பதிகளுக்கு ஒரு மழையில் ரெய்னீஸ் ஐயர் தெருவில் யாராலும் மதிக்ப்படாத தியோடர் இடிபாடுகளில் இருந்து சாமான்களை மாற்றிக்கொடுத்து அவர்களை பார்த்துக்கொள்கிறான்.




“ரெய்னீஸ் ஐயர் தெரு” வாசிகள் யாரும் முழுமையானவர்கள் இல்லை. மனித வாழ்வின் எல்லா குரூரங்களும் , சுயநலன்ங்களும், மன வக்கிரங்க்களும், பலவீனங்களும் கொண்டவர்கள்தான். மீளமுடியா துயரங்களையும், அவலங்களையும் சோகங்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது அவர்கள் வாழ்வு. இதையும் மீறி எதோ அவர்களை வாழ்வின் மீது, சக மனிதர்கள் மீது பிடிப்பை கொடுத்து அவர்கள் வாழ்வை நகர்த்துகிறது. சக மனிதர்கள் மீதான பிரியம், இந்த பலவீனங்கள் ஊடேயும், துயரங்கள் ஊடேயும் நிறைந்து ஓடிக்கொண்டே இருக்கிறபோது எல்லா அவலங்களும்,துயரங்களும், மன மாச்சரியங்களும் கானாமற்போகும் மாய நிகழ்வை ரெய்னீஸ் ஐயர் தெரு” வாசிகளின் வாழ்வின் வழியே நிகழ்த்திக்காட்டுகிறது நாவல். கதையம்சம் இல்லாத ஆனால் கதை மாந்தர்களின் மனவோடை வழியாக பயணிக்கும் நாவல் நம் மனதை வந்தடைகிறது



நாவல் இப்படி முடிகிறது .

எல்லாவற்றையும் உய்விக்கிற மழைதான் “ரெய்னீஸ் ஐயர் தெரு”வை பெருமைப்படுத்துகிறது. டாரதி நினைத்தபடியே அன்று மழை வந்தது. மழையில் ரெய்னீஸ் ஐயர் தெரு”வைப்பார்க்க அழகாக இருந்தது. தெருவின் அமைதியில் மழை மேலும் பிரகாசமெய்தியது.மழை தெருவுக்கு புது மணலை கொண்டு வரும். எதிர்த வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டு கோழிகள் தங்களுடைய எளிய அலகுகளால் மண்ணை கிளறுகிற சந்தோஷத்தையும் மழைதான் தருகிறது. மழை எப்பொழுதும் நல்லதே செய்யும் என்பதை ரெய்னீஸ் ஐயர் தெருகாரர்கள் நம்பினார்கள். இருதயத்து டீச்சர் இந்த மழைக்கு பிறகு சேசய்யா திடீரென ஆச்சரியப்படத்தக்க விதமாய் குணமடைந்து விடுவானென்று நம்பினாள் அன்னமேரி டீச்சர் ஓட்டிலிருந்து இறங்கி வரும் தண்ணீரை பிடிக்கிறதுகாக வரிசையாக பாத்திரங்களை மழையில் நனைந்துக்கொண்டே வைத்தாள்.சாம்ஸனுக்கும் மழையை வேடிக்கை பார்க்க மனம் இருந்தது. டாரதி, தாத்தாவின் கால்மாட்டில்கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டாள், மழையைப்பார்க்க.


ஆசிர்வாதம் பிள்ளையின் மனைவி ரெபேக்காள் மழை தண்ணீர் வீட்டுக்குள் வந்து விடாதபடி பழைய சாக்குத்துண்டுள் இரண்டை எடுத்து வாசல் நடையில் போட்டாள். மழையைப்பார்த்துக்கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போலத்தோண்றுவார்கள் மழையின் போது.







வண்ணநிலவன்:




1948ல் பிறந்த வண்ணநிலவன் என்று அழைக்கப்படும் உ.நா.ராமச்சந்திரன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். துக்ளக் பத்திரிகை யில் சில காலம் பணியாற்றிய வண்ண நிலவன், தமிழில் குறிப்பிடத்தகுந்த திரைப்படமான ருத்ரையாவின் "அவள் அப்படித்தான்” திரைபடத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவரது "கடல்புரத்தில்" நாவல் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற நாவல். இவரது ”கம்பா நதி” நாவல் தமிழக அரசின் பரிசை பெற்றது. எஸ்தர், பாம்பும் பிடாரனும், தேடித் தேடி, உள்ளும் புறமும், தாமிரபரணிக் கதைகள் போன்றவை இவரது முக்கிய சிறுகதைத் தொகுதிகள். மெய்பொருள்,காலம் இவைகள் இவரது கவிதை தொகுப்புகள்  தமிழ் நாவல்களில் மிகவும் தனித்துவமான ”ரெயினீஸ் ஐயர் தெரு” 1981ல் வெளிவந்தது. இந்த நாவலின் சமீபத்திய பதிப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.