Wednesday, December 30, 2009

மூன்று கவிதைகள்

   ஒன்று  


ஏதோ இருக்கிறதென்றுதான்
போய் கொண்டிருக்கிறோம்
மின்னல் வெட்டின் ஷணமேனும்
அது புரிபடலாமென்று


நாம் கடந்த பாதையை
அடையாளம் காட்டும்
உறித்து விழுந்த
வெங்காய அடுக்குகள்.



 இரண்டு


பிரதிபலிப்பு



மகிழம் பூப்போல
உறுத்தாமல் முகத்தில் விழும்
குளிர் மழைச்சாரல்.
ஜன்னல் கம்பிகளுக்குப்பின்
எட்டிப்பார்க்கும் அணில் குஞ்சு
கால் மேல் கால் போட்டு
மோனத்தில் சிரிக்கும் குழந்தை
அகல் விளக்கின் மெல்லிய
தீஞ்சுடர்
இவைகள் எனக்கு உன்னை
ஞாபகப்படுத்துவது போல
நீ எனக்கு இவைகளை.



  மூன்று   


பின்புறத்தில் ஒரு
கற்பகவிருட்சம்
அதன் நிழல்திட்டில்
ஒரு காமதேனு
பால் கறக்க
அமுதசுரபி
இவையன்றி
பிரிதொன்றும் வேண்டாம்
பராபரமே


.

Friday, December 11, 2009

மரணத்தின் கண்கள் வழியாக ஒரு தரிசனம்




குட் ப்ளாக்காக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி

***************************************************************


“இவை சினிமா வரலாற்றின் ஒளிரும் தருணங்கள். அவருடைய சினிமாவைப்பார்க்கும் பொழுது என் உணர்வுகளை வார்த்தைகளால் விளக்க முடிவதிலை சத்யஜித்ரே மறைந்தபொழுது என் மனம் மிக சோர்வடைந்தது. ஆனால் நான் இவருடைய சினிமாவை பார்த்த பொழுது ரேயின் இடத்தை நிரப்புவதற்கு சரியான மனிதனை நமக்கு கொடுத்தற்காக கடவுளுக்கு நன்றி
தெரிவித்தேன்” அகிரா குரஸேவா இப்படி சொல்வது ஈரானிய இயக்குனர் Abbas Kiarostami பற்றியும் அவரது திரைப்படங்களைப்பற்றியும். மிகவும் இறுக்கமான தணிக்கை விதிமுறைகளை கொண்ட ஈரானின் அமைப்பிற்குள் இருந்துக்கொண்டு , ஈரானிய தணிக்கை விதிகளுக்கு உட்பட்டும் அதே சமயம், உலக பார்வையாளர்களை தன் படைப்பின் வசம் ஈர்த்துக்கொண்டும் மிக கடினமான பாதையில் பயணித்தார் Abbas Kiarostami. 1979 ஆம் ஆண்டு

நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின் அவரின் பல திரை சகாக்கள் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று விட்ட பின்பும் Kiarostami ஈரானினேயே தங்கிவிட்டார். ஈரானை விட்டு சென்றால் தன் சாரத்தை தான் இழந்துவிடுவேன் என்ற Abbas Kiarostami, The Bread and Alley (1970), என்ற 12 நிமிட குறும்படத்தோடு தன் திரைபட-இயக்குனர் வாழ்வை தொடங்கினார். 1997 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்பட விழாவில் அவருக்கு Golden Palm விருதை வாங்கிதந்த திரைப்படம் Taste of Cherry.

மரணம் எப்பொழுதுமே வாழ்க்கையை யோசிக்கவைக்கிறது. மரணத்தை முன்னிருத்தி யோசிக்கும் பொழுது வாழ்வின் அர்த்தம் அல்லது அர்த்தமின்மை அவரவர் இயல்புக்கேற்ப வெளிப்படுகிறது. வாழ்க்கையின் பல கண்ணாமூச்சி விளையாட்டு புதிர்களை மிக எளிதாக கட்டவிழ்த்து விடுகிறது மரணம். Abbas Kiarostami யின் Taste of Cherry. மரணத்தின் கண்கள் வழியே வாழ்க்கையை தரிசிக்கிறது.

நடுதர வயதுடைய Mr. Badii தன் காரை மிக மெதுவாக டெஹரான் வீதிகளில் ஓட்டிக்கொண்டே யாரையோ தேடுகிறார். வேலைக்கு ஆள் வேண்டுமா என கேட்கும் கூலி தொழிலாளிகளிடம் பதிலேதும் பேசாமல் இன்னதென்று

 இனம்கண்டுபிடிக்க முடியாத ஒரு முக இறுக்கத்துடன் தன் காரை ஓட்டிசெல்கிறார்.மெல்ல நகரத்தை விட்டு வெளியே வரும் அவர் கண்கள் யாரையோ தேடிய வண்ணமிருக்கிறது. மிகவும் புழுதி படந்த மலைப்பாங்கான மண் சாலைகளில் பயணிக்கிறது கார். ஒரு பொது தொலைபேசியகத்தில் பேசிக்கொண்டிருக்கும் ஒருவனின் பேச்சை காரை நிறுத்தி கேட்கிறார். அவன் இவரை பார்த்து கத்தியவுடன் நகர்கிறார். குப்பை பொறுக்கும் ஒருவனை வழியில் பார்க்கிறார். ஒரு நாளைக்கு குப்பையில் என்ன கிடைக்கும் ,அவன் ஊர் எது , அவனுடைய சம்பாத்தியம் போதுமானதாக இருக்கிறதா என நிதானமாய் கேட்டு தெரிந்துக்கொண்டு அதிகமாக சம்பளம் தருகிறேன் என்னுடன் வருகிறாயா? என கேட்கிறார் அவன் மறுக்க இவர் மீண்டும் வற்புறுத்தி கேட்கிறார். அவன் மறுத்து சென்றுவிடுகிறான். இவர் முகத்தில் ஏமாற்றம்.தன் பயணத்தை தொடர்கிறார்.


கார் மெல்ல செல்கிறது. வழியில் ஒரு இளம் வயது ராணுவ வீரன் லிஃப்ட் கேட்க Badii எங்கு அவன் செல்வதாக கேட்டு அவனை தன் காரில் ஏற்றிக்கொள்கிறார். நீண்ட நடையின் விளைவாய் களைத்தவனாக காணப்படும் அவன் காரில் ஏறிக்கொள்கிறான். Badii மெல்ல பேச்சுக்கொடுக்கிறார் அவர்கள் உரையாடளின் வழியாக நமக்கு சில விசயங்கள் நமக்கு புரிபடுகிறது குர்தூஸ் பகுதியை சேர்ந்த அவன் ஒன்பது பேர் உடைய பெரிய குடும்பத்தை சார்ந்தவன். பணத்தேவை அவனுக்குகிருந்தது. ஆறு மாதம் ஒரு ராணுவ வீரன் பெறக்கூடிய சம்பளத்தை பத்து நிமிடத்தில் பெற்றுதரக்கூடிய வேலை இருக்கிறது செய்கிறாயா? என் கேட்கிறார் Badii. அவன் மெளமாக இருக்கிறான். கொஞ்சம் தயக்கத்திற்கு பின் என்ன வேலை என அவன் கேட்ட, வேலையை பற்றி என்ன சம்பளம் தானே முக்கியம் என்கிறார் Badii.அவன் முகத்தில் யோசனை கொஞ்சம் கலவரம் கூட, ஒரு தவறான ஆளிடம் மாட்டிக்கொண்டோமோ என. அப்போது தான் கவனிக்கிறான் கார் நகரத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை. உங்க்ளுக்கு என்ன வேண்டும்? என்னை இறக்கிவிடுங்கள் என கொஞ்சம் கோபத்தோடு அவன் கூற Badii உன்னை மீண்டும் உன் இடத்தில் இறக்கி விட்டு விடுகிறேன் என்கிறார். கார் ஓர் இடத்தில் நிற்கிறது. Badii காரிலிருந்து இறங்க, அவன் காரிலேயே அமர்ந்திருக்கிறான். “இறங்கி வந்து இந்த குழியை பார்.” என்கிறார் அவன் பேசாமல் இருக்கிறான்.

“ நாளை காலை 6 மணிக்கு இந்த இடத்திற்கு வா. என் பெயரை இரண்டு முறை கூப்பிடு நான் பதில் சொன்னால் எனக்கு கை கொடுத்து இந்த குழியிலிருந்து தூக்கிவிடு...... ஒரு வேளை ..... பதில் வரவில்லை என்றால் ....” Badii நிறுத்தி விட்டு அவனைப்பார்கிறார். அவன் எங்கோ பார்க்கிறான் மண்னை எடுத்து என்னை மூடி விட்டு காரில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள். எனக்காக இந்த உதவியை செய்வாயா? என்கிறார் அவன் “ நான் எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ள விரும்பவிலை. என்னை மீண்டும் என் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்” என மறுக்கிறான். Badii மீண்டும் மீண்டும் தன் கொளரவமான மரணத்திற்கு உதவ கெஞ்ச ,ஒரு நிலையில் காரைவிட்டு மண் இறக்கத்தில் இறங்கி ஓடிவிடுகிறான் அவன். Badii சோர்ந்து போகிறார். மீண்டும் தொடங்குகிறது அவரது மரணத்திற்கு கொளரவம் கொடுக்க உதவும் ஆள் தேடும் படலம்.


ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்து டெஹரானில் படிக்கும் ஒரு மாணவனை ஒரு இயங்காத சிமெண்ட் தொழிற்சாலை அருகே பார்த்து அவனை

 தன்னுடன் ஒரு காற்றோட்டமான பயணத்திற்கு அழைக்கிறார் Badii. வழக்கம் போல அவனது பின் புலத்தை அறிந்துக்கொள்கிறார். “ இந்த வாழ்க்கை கடவுள் அளித்தது என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்குமென நம்புகிறேன். அவர் அளித்த வாழ்வை முடிந்து விட்டது என் அவர் தீர்மானிக்கும் தருணத்தில் திரும்ப பெற்றுக்கொண்டு விடுகிறார் .... ஆனால் முழுவதும் உறிஞ்சி எடுக்கப்பட்டு சக்கையாக உணரும் மனிதன் கடவுள் செயல்புரியும் வரை காத்திருக்கமுடியாது அவன் தானாக செயல்பட்டாக வேண்டும் இலையா? “ காரை ஓட்டிக் கொண்டே Badii பேசுவதை அந்த மனிதன் மொளனமாக கேட்கிறான். எனவே தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாக சொல்கிறார் Badii.

தற்கொலை இஸ்லாமியத்திற்கு எதிரானது. அது பாவசெயல் என்கிறான் அந்த இளைஞன். “ சந்தோஷமில்லாமல் இருப்பதும் பாவசெயல் தானே? நாம் சந்தோஷமில்லாமல் இருக்கும் பொழுது நம்மை சுற்றி இருக்கும் எல்லோரையும் வேதனைபடவைக் கிறோம். மற்றவர்களை மனதை வேதனை படுத்துவது பாவமில்லையா? மனிதன் துன்பப்படுவதை கடவுள் விரும்புவாரா? அதனால்தான் இந்த சலுகையை அவர் அளித்திருக்கிறார் “ என வாதாடும் Badii அவர் தோண்டி வைத்திருக்கும் குழிக்கு அந்த இளைஞனை அழைத்து வருகிறார். “இன்று இரவு என்னிடம் உள்ள அனைத்து தூக்கமாத்திரையையும் சாப்பிட்டு விட்டு இங்கு வந்து விடுவேன் உறங்க.” என கூறி அந்த இளைஞன் நாளை அதிகாலை வந்து என்ன செய்ய வேண்டும் என கூறுகிறார். “ மற்றவர்களை கொல்வது நம்மை நாமே கொல்வது இரண்டிற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவிலை இரண்டும் ஒன்றுதான் “ என கூறி தன் இடத்தில் இறங்கி கொள்கிறான் அவன்.


கடைசியாய் அவர் சந்திப்பது ஒரு அருங்காட்சியக ஊழியரை. அவரின் மகனின் வைத்திய செலவுக்காக அவருக்கு பணம் தேவைப்படுகிறது. Badii யின் வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டாலும் அவர் தன் எண்ணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்கிறார். ஒரு காலத்தில் குடும்ப சுமைகளினால் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளான அவர் ஒரு நாள் அதிகாலை வீட்டை விட்டு புறப்படுகிறார். தற்கொலை செய்து கொள்ள.

இன்னும் விடியவிலை. ஒரு செர்ரி மர கிலையில் கயிறை கட்டுவதற்காக தூக்கி போட்டு முயற்சிக்கிறார். முடியவிலை பின் மரத்தின் மீது ஏறி கயிறை கட்ட முயலும் பொழுது, ஒரு செர்ரி பழத்தை எடுத்து சுவைக்கிறார். காலை மெல்ல புலர்கிறது. அவர் நாவில் முழுவதும் படரும் செர்ரியின் சுவையும், ஸூர்யோதயமும் அவருக்கு இனம் புரியாத சந்தோஷத்தை தருகின்றன. வாழ்க்கை தன் விஸ்வரூபத்தை ஒரு சில கணப்பொழுதுகளில் வெளிப்படுத்தும் மாயாஜாலத்தை அந்த கணம் அவருக்கு நிகழ்த்தியிருக்கவேண்டும். அவர் மரத்தில் இருப்பதை பார்க்கும் அவ்வழியே போகும் பள்ளி குழந்தைகளுக்கு பழங்களை பறித்து போடுகிறார்.குழந்தைகளின் முகம் மலர்கிறது. இவர் மனம் இலகுவாகிறது .கீழிறங்கி வீடு செல்கிறார். வாழ்க்கையின் சுவை சின்ன,சின்ன விசயங்களில் பொதிந்துகிடக்கிறது. என கூறும் அவர் Badii தன் முடியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார். பிரச்சனைகளுக்கு தீர்வு “இது” ஆகாது. என்கிறார். Badiiயின் பிரச்சனை என்னவென்று கேட்க திரைபடத்தின் வேறு எங்கும் சொல்லாததது போலவே அவரிடமும் Badii சொல்லாமல் விடுகிறார். Badii பிடிவாதமாக இருக்க அவருக்கு உதவுவதாக கூறுகிறார் அருங்காட்சியக ஊழியர்.

வீடு திரும்பும் Badii அன்று இரவு தன் அறையிலிருந்து கிளம்புகி றார்.அவர் அறையில் நடமாடு வது நமக்கு நிழலுருவமாக காட்டப்படுகிறது. அவர்
 
தூக்க மாத்திரை சாப்பிட்டாரா ..எவ்வளவு சாப்பிட்டார் என்பது நமக்கு தெரிவதில்லை. காரில் கிளம்பும் Badii தன் குழிக்கு வந்து சேருகிறார்.மெல்ல குழிக்குள் இறங்கி அமர்கிறார். நிலவின் ஒளி அவர் முகத்தில் படர்கிறது. காய்ந்த சருகுகள் சில அவர்மேல் விழுகிறது.கருந்திரளான மேகக்கூட்டம் நிலவை மறைக்கிறது. Badiiயின் முகத்திலிருந்து ஒளி விலகி இருள் படர்கிறது.


Badii யார் அவர் பிண்ணனி என்ன அவர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் மறுநாள் காலை அந்த அருங்காட்சியக ஊழியர் வந்தாரா அவரின் குரலுக்கு Badiiயிடமிருந்து பதில் வந்ததா என்ற கேள்விகளுக்கு Abbas Kiarostami பதில் சொல்லவில்லை. அந்த கேள்விகளுக்கான பதிலை அவர் நம்மிடம் கேட்கிறார். நம் பதிலிருந்து விரியக்கூடும்  வாழ்க்கை , சக மனிதர்கள் பற்றி நம் பார்வை, நம் தத்துவம்.





 



Thursday, November 26, 2009

நான்கு கவிதைகள்

                     1


இறைந்துக்கிடப்பவை

என்னுடையதல்ல,

உலுக்கி விழவைக்கலாம்தான்

என்னுடையதாகாது அதுவும்.

பாவை விளக்கின்

சாயலில் இமைமூடி

மோனத்தில் நிற்கையில்

கை ஏந்தலில்

விழக்கூடும்-

ஒரு புஷ்பம்

காலையின் தூய்மையுடன்-

எனக்காக.

 
 
 
                         2
 
 
வீடு திரும்பாத மேய்ப்பன்



தேடியலைந்து

மந்தையில் சேர்த்து

எண்ணுகையில்

குறையும்

மீண்டும் ஒரு ஆடு.

அவன்

வீடு திரும்பவே இல்லை.




                          3

விளம்பரம் பார்த்தேன்

நீ

தொலைந்து போய்விட்டதாக

இப்போதாவது

கண்டுபிடித்தார்களே






              4


   பிள்ளையார்


யாரும் இல்லை

வேணிற்கால வெக்கையும்

வெடித்த குளத்தையும் தவிர்த்து.

எப்போதாவது எட்டிப்பார்க்கும்

காக்கையும் கூட

காணம் இன்று

உறவுகள் அற்றவெளியில்-

விழுந்த அரச இலைகளை

எண்ணிக்கொண்டு

கழியும் பொழுது.




.

Thursday, November 19, 2009

இரண்டு கவிதைகள்

கவிதை : ஒன்று

எனக்குப் பிடிக்கும்

இரை தேடும் பல்லியின் லாவகம்.

முன்னிரு கால் பின்வாங்கி

பின்னிரு கால் முன்வாங்கி

சாதுவாய் பதுங்கி ஒரு முன்னேறல்

இறையின் நிழல் திட்டில் ஒதுங்கி

சூட்சம நேரத்திற்காய் ஒரு தவம்.

என்னிரு இமைகள் சொடுக்கும்

காலவெளியில் ஒரு

பாய்ச்சல்.

நாவின் சுளீர். வயிற்றுக்குள் இரை.








கவிதை : இரண்டு


பழைய நண்பர்கள்



நேற்றோ முன்தினமோ

நினைவில்லை

வெறுமையான தெருவின்

நடுவே அவனைப் பார்த்தேன்

கீரை துளிர்கள்

எட்டிப்பார்க்கும் மஞ்சள்பை சகிதமாய்.

சௌக்கியமா என்றேன்

தலையசைத்தான்.

கதவடைத்த வீடுகளின் அமைதி

தெருவை நிறைத்தது.

நல்ல வெய்யில்.

எங்கோ காகம் ஒன்று கரைந்தது.

அரிசி பையை கை மாற்றிக்கொண்டேன்.

கடந்து போன யாரோ ஒருவன்

எங்களை பார்த்துப் போனான்.

இவன் என் தோள்தாண்டி

எங்கோ பார்த்தான்.

வரட்டுமா என்றேன்.

சரி என்றான்.


.

Thursday, November 12, 2009

ஒரு குழந்தையின் மனக்குகை ஓவியம். - 400 உதைகள்

புரிந்துக்கொள்ள மிகவும் கடினமானதும் பலசமயங்களில் புரிந்து கொள்ளப்படாமலே வாழ்வின் சந்தடிகளில் மறைந்து போவதுமாக இருக்கிறது குழந்தைகளின் அக உலகம். ஏதேதோ அக/புற காரணங்களால் தன்னை சுற்றி உள்ள உறவுகளோடு தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் குழந்தைகள் ஒரு நேரத்தில் யாருமற்ற வெளியை உணரத்தொடங்குகிறார்கள். புற உலகோடு அந்நியப்படும் அந்த குழந்தைகள் தங்களுக்கான உலகை தாங்களே சிருஷ்டிக்க தொடங்கும் பொழுது அவர்களை சுற்றியுள்ள உலகத்தோடு எழும் முரண்பாடுகளின் அழுதத்ததில் அவர்கள் வாழ்க்கை சிதிலமடைய தொடங்குகிறது. பிரெஞ்ச் சினிமாவின் “புதிய அலை சினிமா”க்களில் ஒன்றான ஃப்ரான்ஸ்வா ட்ரூஃப்போ (François Roland Truffaut)வின் 400 உதைகள் (Les Quatre cents Coups-(1959)) அப்படியோரு வாழ்வை முன் வைக்கிறது.


பாரிஸில் ஒரு அடுக்கு மாடியில் குடியிருப்பில் இருந்த அந்த சிறிய வீடு பொளதீக ரீதியாக மட்டுமல்லால் மனம் சார்ந்தும் மிக இறுக்கமாக இருந்தது 14 வயது Antoine Doinelக்கு. கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்தியதர வர்க்க சூழல். அலுவலம் தரும் அலுப்பு,எரிசலோடு வீடு திரும்பும் அம்மா,அப்பா (தாயின் இரண்டாம் கணவர்) இருவருக்குமே 14 வயது Antoine Doinelயிடம் பேசுவதற்கு அதிகம் ஒன்றும் இல்லை.Antoine Doinel எதிர்கொள்வதெல்லாம் எரிச்சல் மிகுந்த மறுமொழிகள். மனம் திறந்து பேசுவதற்கோ,இயல்பான வேடிக்கையான பேச்சிக்களூக்கோ இடமில்லாத இறுக்கமான இடமாக இருக்கிறது வீடு. “அவனை இந்த கோடைக்காலத்தில் என்ன செய்வது?” என விவாதிக்கிறார் அப்பா. “ஏதாவது கோடை முகாமிற்கு அனுப்ப வேண்டும்” என் தீர்மானமாகிறது. தான் ஒரு வேண்டப்படாத ஜீவனாக உணர்வதற்கு பல சந்தர்ப்ங்கள் அமைகிறது Antoine Doinelக்கு. தன் திருமணத்திற்கு முன்பே உருவான கருவை அழிக்க தன் அம்மா நினைத்தது அவனுக்கு தற்செயலாக தெரிய வருகிறது. அவன் யாருக்கும் தேவையில்லாதவனாக அவன் உணர்வதாக அவன் மொழியாக இயக்குனர் சொல்லவில்லை ஆனால் பார்வையாளர்கள் உணர்கிறோம். திரைக்கதை அமைவில் பெரிய சவாலான இந்த விசயத்தை மிக எளிதாக கடக்கிறார் ஃப்ரான்ஸ்வா ட்ரூஃப்போ.



Antoine Doinel எதிர்கொள்ளும் மற்றொரு உலகம் அவன் பள்ளி. குழந்தைகளின் இயல்பான சின்ன,சின்ன குறும்புகளை கூட குற்றமாக பார்த்து தலைகுனிவுக்கு உள்ளாகும் தண்டனைகளை தரும் இயந்திரதனமான ஆசிரியர்கள் பள்ளியை அவனிட மிருந்து அந்நியபடுத்துகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றலை, கற்பனை திறனை விகாசப்டுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியம். தங்கள் வாழ்வில் நடந்த முக்கியாமான நிகழ்வை பற்றி எழுத சொல்கிறார் ஆசிரியர், உற்சாகமடையும் Antoine Doinel தன் தாத்தா இறந்த நாளின் நினைவுகளை எழுதுகிறான். பால்ஸாக்கின் (Balzac) சொற்களை அப்படியே தன் கட்டுரையில் பயன்படுத்தி எழுதுகிறான் Antoine Doinel. அந்த சிறுவயதில் பால்ஸாக்கின் செறிவான இலக்கியத்தை தேடிப்போன அவனுக்கு அவன் ஆசிரியரிடமிருந்து கிடைக்கும் வெகுமானம் “ பிறர் எழுத்துக்களை களவாடும் திருடன்” (plagiarist) என்ற வன்சொல்தான்.

தான் யாருக்கும் முக்கியத்துவம் இலாதவன் என்ற உணர்வும்,தன்னுடைய நியாயமான செயல்களுக்குகூட கிடைக்கும் அவமானங்களும் அழைத்து போகும் உளவியல் சுழலுக்குள் செல்கிறான் Antoine Doinel. தன் மனநெருக்கடிக்கு காரணமான அமைப்பின் மீது நேரடியாக தன் கோபத்தை வெளிபடுத்த முடியாத ஆளுமை தன் பிறழ்ந்த செயல்பாடுகள் மூலமாக தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளத்தலைபடும். Antoine Doinel பள்ளி நேரத்தில் சினிமா செல்கிறான்,புகை பிடிக்க கற்றுக்கொள்கிறான். சரளமாக பொய் சொல்கிறான்( ஒரு முறை ப்ள்ளிக்கு வராதற்கு காரணமாக “தன் அம்மா இறந்துவிட்டதாக” கூறுகிறான்) , மது அருந்துகிறான்., திருடுகிறான்.

தன் தந்தையின் அலுவகத்திலிருந்து அவன் தட்டச்சு இயந்திரத்தை திருடும் பொழுது மாட்டிக்கொள்ளும் Antoine Doinel. அவன் தந்தையாலேயே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறான்.அங்கிருந்து தப்பித்து ஓடி அவன் அதற்கு முன் எப்பொழுதுமே பார்த்திராத ஒரு கடற்கரையில் அவன் ஓடி வருவதோடு படம் முடிகிறது.ஆனால் நம் மன ஓட்டம் அங்கிருந்து தொடங்குகிறது. Antoine Doinel வாழ்க்கை சிதிலமடைந்ததற்கான காரணங்களை நம் மனது தேட தொடங்குகிறது. குழந்தைகள் பற்றிய நம் கண்னோட்டத்தை யோசிக்க வைக்கிறது. எல்லா சிறந்த படைப்புகளும் எல்லாவற்றையும் தானே பேசிவிடுவதிலை வாசகன் அல்லது பார்வையாளன் தன் அனுபவம் சார்ந்து,தன் வாழ்க்கை தரிசனம் சார்ந்து அதை புரிந்துக்கொள்ளவும் , பொருள் கொள்ளவும் ஒரு வெளியை அது விட்டுச்செல்கிறது , 400 உதைகள் போல.




புதிய அலை சினிமா பற்றி ஒரு பின்குறிப்பு


ஒரு நாயகன் (மிக நல்லவன்), அவனுக்குநேர் எதிராக ஒரு வில்லன் (மிககெட்டவன்) என வறையறுக்கப்பட்ட கதா பாத்திரங்ககள் இருவருக் குமிடையே ஒரு சிக்கல் , நாயகனின் அதீத சாகசங்கள் முடிவில் நாயகனுக்கு வெற்றி. வசனங்களூக்கு முக்கியத்துவம், செயற்கையான காட்சியமைப்புக்கள், போன்ற அலுப்புதட்டக்கூடிய ஒரே சூத்திரத்திற்குள் அடைப்பட்டு கிடந்த சினிமாவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புது திக்கில் பிரயாணித்தது புதிய அலை சினிமா.

சினிமா வேறு வாழ்க்கை வேறு சினிமா கதாபாத்திரங்களுக்கு நிகழ்பவை நம் வாழ்வில் நிகழாது என்ற பார்வையாளனின் மனோபாவத்தை உடைத்தது புதிய அலை சினிமா. திரையில் நிகழ்பவையோடு தன்னையும் தன் வாழ்வையும் பொருத்திப்பார்க்க வைத்தன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்பங்கள் முக்கியத்தும் பெற்றன. கேமராவை ஒரே இடத்தில் வைத்து கதாபாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்காமல் கேமரா நகரத்தொடங்கியது. கதாபாத்திரங்களுடன் சூழழும் முக்கியத்தும் அடைந்தது

1950 களின் பின் பகுதியில் பிரான்சில் தோன்றிய இந்த அலை இத்தாலிய Neorealists, சில Hollywood இயக்குனர்களின் திரைக்கதை உத்தி மற்றும் ஆந்றரே பாஸின் போன்ற கலை விமர்சகர்களின் பாதிப்பில் உருவானது. அதன் முன்னோடி இயக்குனர்கள் : Jean-LucGodard, François Truffaut, Éric Rohmer, Claude Chabrol மற்றும் சிலர். இவர்கள் “படைப்பாளி கோட்பாட்”டை(AUTHOR’S THEORY) யை முன் வைத்து இயங்கினர். 400உதைகள் ஃப்ரான்ஸ்வா ட்ரூஃப்போ முதல் படம். படத்தின் பல விசயங்கள்  ட்ரூஃப்போவின் வாழ்வில் நடந்தவை( ட்ரூஃப்போ அவர் அம்மாவிற்கு திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை, ட்ரூஃப்போ தன் தந்தையின் அலுவல தட்டச்சு இயந்திரத்தை திருடும் பொழுது மாட்டிக்கொண்டவர், அதற்காக சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பபட்டவர்)



ஒரு நாயகன் (மிக நல்லவன்), அவனுக்குநேர் எதிராக ஒரு வில்லன் (மிககெட்டவன்) என வறையறுக்கப்பட்ட கதா பாத்திரங்ககள் இருவருக் குமிடையே ஒரு சிக்கல் , நாயகனின் அதீத சாகசங்கள். முடிவில் நாயகனுக்கு வெற்றி. வசனங்களூக்கு முக்கியத்துவம், செயற்கையான காட்சியமைப்புக்கள், போன்ற அலுப்புதட்டக்கூடிய ஒரே சூத்திரத்திற்குள் இன்னும் அடைப்பட்டு கிடக்கும் தமிழ் சினிமா 400 உதைகள் வெளிவந்த 1959ல் என்ன மாதிரியான படங்களை எடுத்துக்கொண்டிருந்தது? என பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது........


1959ல் தமிழ் சினிமா:




===========================================================

"குட் ப்ளாக்" க்காக தேர்ந்தெடுத்த யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி"





========================================================

Thursday, November 5, 2009

நான்கு கவிதைகள்


  • கவிதை ஒன்று




ஓடிக்கொண்டிருந்தது நதி.
கரையில் அமர்ந்திருந்தேன்.
வெயில் தாழ குளித்துக் கரைமீண்டாய் நீ
நதியின் சுழல், ஆழம், குளிர்மை
எனப் பேசிக்கொண்டே போனாய்.
ஓடிக்கொண்டிருந்தது நதி.
கேட்டுக்கொண்டிருந்தேன்
ஒரு முடவனைப் போல.
ஏதோ ஒரு தருணத்தில்
உன் தலை சிலுப்பில்
பூ தூறலாய் விழுந்தது
நதி என் மேலும்.
நீந்த முடியாத நதி.



  • கவிதை இரண்டு


அம்மா
காத்திருப்பாள்
அப்பாவிற்காக.

மிடறு தண்ணீரும்
கவளம் சோறும்
இறங்காது.
தகிக்கும் வெயிலில்.
வெறிச்சோடிய தெருவும்.
ஆண்டணா கம்பிகளும் -
ஒதிய மரமும்
மெளனமாய்
அம்மாவைப் பார்த்துக் கிடக்கும்
அம்மா காத்திருப்பாள்
அரவமற்ற வெளியில்
ஏதோ ஒரு தேவகணத்தில்
மலரும்
கருஞ்சிறகுகள்
அம்மாவின் மனங்குளிர.




  • கவிதை மூன்று


விரிந்த வானம்.
யாரோ இறைத்துபோன
தானிய மணிகள்போல
இறைந்து கிடக்கும் நட்சத்திரம் -
முற்றம் வழி
கூடம் நிறைக்கும் நிலவு
என்பதாய் இருந்தது
அப்பாவின் இரவுகள்
எனக்குக் கிடைத்தது
துண்டு வானம் -
மூட்டம் இல்லாத நாளில்
இரண்டொரு நட்சத்திரம்
சாளரம் வழியே
கொஞ்சம் நிலவு.
உன் வீடுதான் காரணமென்றாலும்
நீயும் சொல்லக்கூடும்
என் வீடு
உன் வானத்தை மறைப்பதை.



  • கவிதை நான்கு



மிகவும் அழகானது
நீ உடைத்தப் பூஞ்ஜாடி
ஒரு பிரயாணத்தின் நினைவாக
அது இருந்தது
என் மேஜையில்.
உன் முகம் வீங்க
அறைய வேண்டும் போலிருக்கிறது
இருந்தாலும்-
அது உடைந்துதான் போய்விட்டது.

.